தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி


இந்த வலைப்பதிவில் உள்ள வாத்தியாரின் ஆக்கங்கள் அனைத்தும் பழையவை.

உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமிட முடியாது. மாற்றாக நீங்கள் மின்னஞ்சல் மூலம் அதைச் செய்யலாம்.

அதற்கான பிரத்தியோக மின்னஞ்சல் முகவரி:

umayal2005@gmail.com

அன்புடன்
வாத்தியார்

Thursday, January 22, 2009

காற்றலையில் உருவான பந்தம்!

பாடும் நிலா.திரு.S.P. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு
மாலையிட்டு மகிழும் நமது சக பதிவர்
திரு.கோவை ரவி அவர்கள்

காற்றலையில் உருவான பந்தம்!

பந்தம் என்பது உறவைக்குறிக்கும் உயிரோட்டமான் சொல். உறவை
மேம்படுத்திக் காட்டும் சொல்!

உறவு எப்படிக் காற்றலையில் உருவாகும் என்று புருவத்தை உயர்த்துபவர்கள்,
பதிவை முழுமையாகப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-----------------------------------------------------------------------------------
கோவை மாவட்டத்தில் உள்ள 36 லட்சம் மக்களுக்கும் தெரிந்தவர்களைப்
பட்டியல் இட முயன்றால், திரு.கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்கள்,
திருமதி வனிதா மோகன் அவர்கள், டாக்டர் G.பக்தவட்சலம் அவர்கள்,
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு.கிருஷ்ணன் அவர்கள், தொழில் அதிபர்.
திரு.என்.மகாலிங்கம் அவர்கள் தொழில் அதிபர்.திருஜி.கே சுந்தரம் அவர்கள்
தொழில் அதிபர்.திரு.S.V.பாலசுப்பிரமணியன் அவர்கள், அன்னபூர்னா
திரு ஸ்ரீனிவாசன் அவர்கள், கவிஞர்.கவிதாசன் அவர்கள், எழுத்தாளர்
திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் என்று பத்துப் பெயர்கள் சட்டென்று
மனக்கண் முன் வந்து நிற்கும்.

அவர்கள் அனைவரையும் மக்கள் நேரில் அல்லது செய்தித் தாள்களின்
மூலம் நன்கு அறிவார்கள்.

ஆனால் நேரிலோ அல்லது பத்திரிக்கைச் செய்திகளிலோ அல்லது புகைப்படம்
மூலமாகப் பார்க்கப் படாமல் அனைத்து மக்களின் மனதிலும் நிற்பவர்
ஒருவர் கோவையில் இருக்கின்றார்.

தன் இனிய குரலால் மட்டுமே அறியப்பட்டவர் அவர்

வாரத்தில் ஆறு தினங்கள் இரவு 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை
கோவை சூரியன் பண்பலையில் அசத்தலாகப் பழைய திரை இசைப்பாடல்களை
மனதைக் கவரும் வண்ணம் விதம் விதமாகத் தொகுத்து வழங்குபவர் அவர்.

அசத்தும் குரலுக்குச் சொந்தக்காரர். தன் குரலை வைத்தே எண்ணற்ற
ரசிகர்களை வலைவீசிப் பிடித்துதன் கட்டுக்குள் வைத்திருக்கும் சாமர்த்தியசாலி.

யாரந்தக் குரல் மன்னர்?

அவருடைய பெயர். திரு.R.G.லக்ஷ்மி நாராயணா!

குரலைக் கேட்டால், குழந்தைகூட, அவருடைய பெயரைச் சொல்லும்!

வாரநாட்களில் முத்தாய்ப்பாய், ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் அன்பர்
திரு.L.G.லக்ஷ்மி நாராயணா அவர்கள் தொகுத்து வழங்கும், 'இரவின் மடியில்'
எனும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்றாகும். பிரபலத்திற்குக் காரணம்
பண்பலை ரசிகர்களில் ஒருவர் தெரிவு செய்து அனுப்பும் பத்துப் பாடல்கள்,
எழுதியவரின் விளக்கங்களுடன், தொகுப்பாளரின் விளக்ககமும் சேர
ஒலிபரப்பாகும். நிகழ்ச்சி கிறங்கும் படியாக இருக்கும் என்று சொல்லவும்
வேண்டுமா?

அந்த நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமையன்று, நமது சக பதிவர்
திரு கோவை ரவி அவர்கள் தெரிவு செய்த முத்தான பத்துப்பாடல்கள்
ஒலிபரப்பாகின.

அதன் சிறப்பு என்னவென்றால், பாடும் நிலா.திரு.S.P. பாலசுப்பிரமணியன்
அவர்களின் பரம ரசிகரான ரவி அவர்கள், மற்ற பாடகர்களின் பாடல்களைத்
தெரிவு செய்து, ஒலிபரப்பி எண்ணற்ற பண்பலை நேயர்களை மகிழ்ச்சிக்
கடலில் ஆழ்த்தினார்.

வாருங்கள் அந்த மகிழ்ச்சிக்கடலில் நாமும் சற்று நனைவோம்!
--------------------------------------------------------------------------------------
நிகழ்ச்சியின் துவக்கத்தில் ரவி அவர்கள் இப்படிக்குறிப்பிட்டிருந்தார்:

"இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, பாடும் நிலா.திரு.S.P. பாலசுப்பிரமணியன்
அவர்களை நான் சந்தித்துச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, பாலூஜி
அவர்கள்,'நீங்கள் எனது பாடல்களை மட்டும் அல்லாமல் அனைத்துப் பாடகர்களின்
பாடல்களையும் கேட்டு, அவற்றையும், அவற்றின் சிறப்பையும் அடையாளம்
காண வேண்டும்! என்றார்.அதன் காரணமாகவே இந்தத் தொகுப்பில் மற்ற பாடகர்கள்,
மற்றும் பாடகிகளின் பாடல்களைக் கொடுத்துள்ளேன்"
-------------------------------------------------------------------------------------
நிகழ்ச்சியில் ஒலி பரப்பான அந்த முத்துக்கள்!

1.
மதுராபுரி வேந்தனின் புகழைப்பாடும் மதுரமான கானம் முதற்பாடலாக ஒலித்தது.
பாடியவர்.திரு.M.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள். பாலமுரளி அவர்களைப் பற்றிச்
சொல்லவா வேண்டும்? சங்கீத சாகரம் அவர். அவர் பாடல் முதலில் ஒலிபரப்பானது
நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தது.

பாடல் இடம் பெற்ற படம்: மகாசக்தி மாரியம்மன்

"மகரந்தம் தான் ஊதும் அரவிந்தம் உன் பாதம்
ஸ்ரீ கோபால கிருஷ்ணனே ஸ்ரீ தேவி மணவாளனே!"

பாடலின் சரணத்தில்வரும் வரிகளை ரவி அவர்கள் சிறப்பித்துத் தன் விளக்கத்தில்
சொன்னார்:

அலைபாயும் கடல் ஏழும் அசையாமல் இசை கேட்கும்
பறவை நடுவானில் பறக்காமல் துயில் மேவும்
கால் வைத்த இடமெல்லாம் பூவாகும்
கைவைத்த இடமெல்லாம் தேனூறும்

பாடல் அற்புதமாக இருந்தது. அரிய பாடலும் கூட!
----------------------------------------------------------------------------------
2.
மன்மதனுக்கு எத்தனை பெயர்கள்?

மன்மதனை அறிவோம். அவனுக்கு உரிய மற்ற பெயர்களைச் சொன்னதோடு,
அதைச் சொல்லித் துவங்கும் பாடலைத்தந்தார் கோவை ரவி.

அனங்கண் அங்கஜன் அன்பன் வசந்தன் எனும் பெயர்களும் மன்மதனுக்கு
உண்டாம்.

ரசிகர்களை மகிழ்விற்கும் அப்பாடலை பாடும் நிலா.திரு.S.P. பாலசுப்பிரமணியன்
அவர்களும், செல்வி. L.R. ஈஷ்வரி அவர்களும் சேர்ந்து பாடினார்கள்.

காதல் தலைவன் மன்மதன், தன் காதலி ரதி தேவியுடன் தென்றலென தேரில்
வலம் வரும் காட்சியை நெகிழ்ந்து நெக்குருகப் பாடினார்கள் பாடிய இருவரும்

"அனங்கன், அங்கஜன், அன்பன் வசந்தன் என
வணங்கும் என் உயிர் மன்னவா" என்று துவங்கும் அந்தப் பாடல் அருமையாக
இருந்தது.

பாடல் இடம் பெற்ற படம்: கண்காட்சி

பாடலின் துவக்கத்தில் தொகையறாவில் இயக்குனர் திரு.A.P.நாகராஜன் அவர்கள்
இப்படிக் கூறி நம்மை மகிழ்வித்திருந்தார்.

வெண்நிலவைக் குடைபிடித்து
வீசுதென்றல் தேர் ஏறி
மென் குயில்தான் இசை முழங்க
மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி
கனகமணிப் பொற்பாவை
அன்ன நடை ரதியுடனே
அழகுமகன் வில்லேந்தி
கண் முல்லை, தாமரை,மா
தனி நீலம், அசோகமென
வண்ணமலர்க் கணை தொடுத்தான்
வையமெல்லாம் வாழ்கவென்றே!

படத்தில் திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் அவர்கள் மன்மதனாகவும்,
குமாரி பத்மினி அவர்கள் ரதிதேவியாகவும் நடித்திருந்தார்கள்

பாடலின் தனித்ன்மையையும், சிறப்பையும் பற்றி பாலூஜி அவர்கள் சொல்லக்கேட்டு,
அதைத் தேடிப் பிடித்துத் தானும் கேட்டு மகிழ்ந்த செய்தியை ரவி அவர்கள் இந்தப்
பாடலின் துவக்கத்தில் சொன்னார்.

அறிவிப்பாளரும், இது யாரும் தெரிவு செய்திட முடியாத சிறந்த பாடல் எனக்
கூறியதோடு, அதைத் தெரிவு செய்து கொடுத்திருந்த ரவி அவர்களையும் மனதாராப்
பாராட்டினார்.

அதோடு இந்தப் பாடலின் மூலம்தான் மனமதனுக்கு உரிய மற்ற பெயர்களும்
தெரிய வந்துள்ளன என்றும் கூறி மகிழ்ந்தார்
---------------------------------------------------------------------------------------------
3.
இன்னிசைக்குயில் பி.சுசிலா அம்மையார் அவர்கள் பாடிய பாடல்
படம்: அவள் தந்த உறவு

"மஞ்சள் இட்ட நிலவாக
மைபூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆனந்தம்"

என்று துவங்கும் பாடல் ஆனந்ததைக் கூட்டும் விதமாக ஒலித்தது.

"SPB அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகவில்லை
ரவி. சுசீலா அவர்கள் பாடிய ஆயிரம் ஆயிரம் பாடல்கள் இருக்கையிலே இந்தப்
பாடலை நீங்கள் தெரிவு செய்ததில் இருந்தே, மற்ற பாடகர்களின் மீது நீங்கள்
கொண்டிருக்கும் அபிமானம் நிரூபணம் ஆகிவிட்டது!" என்று துவக்கத்தில்
தன் உரையில் அறிவிப்பாளர் திருவாளர் R.G.லக்ஷ்மி நாராயணா அவர்கள்
சிலாகித்துச் சொன்னார்!
---------------------------------------------------------------------------------------
4.
ஆனந்தபைரவி ராகத்தில் சூலமங்கலம் ராஜலெட்சுமி அவர்கள், கர்ணன்
திரைப்படத்தில் பாடியிருந்த பாடல் ஒலிபரப்பப் பெற்றது.

படத்தை ஆழ்ந்து நேசித்தவிதம் தெரிவில் தெரிகிறதாகத் தொகுப்பாளர்
பாடலின் துவக்கத்தில் ரவி அவர்களைப் பாராட்டிய பிறகே பாடலை ஒலிக்கவிட்டார்.

படத்தில் பாடல், கர்ணன் தன் மனைவியை அவள் தாய்வீட்டிற்கு அனுப்பும்போது
பின்னணியில் ஒலிக்கும்

"போய்வா மகளே, போய் வா!" என்று துவங்கும் பாடல் மனதை ஈர்க்கும் விதமாக
இருந்தது.
----------------------------------------------------------------------------------------
5
அடுத்து நகைச்சுவைக்கு இடம் அளித்து வித்தியாசமான பாடல் ஒலிபரப்பானது.

படம்: இருவர் உள்ளம்
பாடியவர்கள்: AL.ராகவன் மற்றும் L.R.ஈஷ்வரி

"புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை
புன்னகை செய்யுது சின்னப் பிள்ளை" என்று துவங்கும் பாடல் அருமையாக இருந்தது.

பாடலைப் படத்தில் நடிகவேள்.திரு.M.R. ராதா அவர்களும் நடிகை.திருமதி T.P.முத்து
லெட்சுமி அவர்களும் பாடியிருப்பார்கள்

நடுவில் இப்படி வரிகள் வரும்:

நாயகி: "ஆசையுடன் பேசி நாளாச்சு"
நாயகன்: "ஆபத்து இன்று அங்கேதான் உருவாச்சு!"

"நீ அடுத்து என்னைத் தலாட்டு!" என்ற வரியுடன் பாடல் முடியும்போது திரு.M.R. ராதா
அவர்களின் முகபாவம் அசத்தலாக இருக்கும் என்று தொகுத்தவர் குறிப்பிட்டிருந்தார்
-------------------------------------------------------------------------------------------------------
6.
மிகவும் வித்தியாசமான பாடலைத் தந்தார்கள்

"மலர்களின் ராஜா, அழகினில் ரோஜா" என்று துவங்கும் பாடல் நாத வெள்ளத்துடன்
ஒலிபரப்பானது.

உடனே நாயகன்,"காதலின் ராணி, கலைகளின் வாணி" என்று அவளை விளித்துப்
பாடுவான்

படம்: வள்ளி தெய்வாணை
படியவர்கள்: தனசேகர், மல்லிகா

இந்தப் பாடலுக்கு, அறிவிப்பாளர் இப்படிச்சொன்னார்.

"ரவி, நாம் இருவரும் ஒரே அலைவரிசையில் சங்கமிக்கிறோம். இந்தத் தெரிவு
அதைத்தான் சொல்கிறது!"
---------------------------------------------------------------------------------------
7
அசல் இருக்கையில் நகல்கள் பாடினால், அந்தப் பாடல் எப்படி இருக்கும்
பாருங்கள் என்ற குறிப்புடன் அடுத்த பாடல் ஒலிபரப்பானது.

T.M. செளந்தரராஜன் அவர்களின் நகலான கோவை செளந்தரராஜன் அவர்களும்
L.R. ஈஷ்வரி அவர்களின் சகோதரி L.R. அஞ்சலி அவர்களும் சேர்ந்து இந்தப்
பாடலைப் பாடியிருந்தார்கள்

பாடல் இடம் பெற்ற படம்: உங்கள் விருப்பம்

"மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா
மந்திரத்தைச் சொல்லி விடு ராமா" என்று துவங்கும் பாடல் ஒலிபரப்பானது.

படத்தில் காட்சிக்கு முகம் கொடுத்திருந்தவர்கள் திரு,தேங்காய் சீனிவசன்
அவர்களும் திருமதி.மனோரமா அவர்களும்!
----------------------------------------------------------------------------------
இந்த இடத்தில் நிலையத் தொகுப்பாளர் திரு.R.G.லக்ஷ்மி நாராயணா! அவர்கள்
வந்திருந்த பல குறுஞ் செய்திகளைப் படித்துக் காட்டிப் பாடலைத் தெரிவு
செய்து, தெரிவிற்கான விளக்கங்களையும் அளித்திருந்த நமது நண்பர் ரவி
அவர்களை உவந்து பாராட்டினார்
----------------------------------------------------------------------------------
8
ஏழிசை மன்னர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும், மழலை அரசி திருமதி
M.S.ராஜேஷ்வரி அவர்களும் சேர்ந்து பாடியிருந்த, பலரது கண்ணிலும்
அதிகம் பட்டிராத பாடல் ஒலிபரப்பானது.

பாடல் இடம் பெற்ற படம்: மாதவி

நாயகன்:
"தோட்டக்கார சின்னமாமா தோப்புக்குள்ளே பாரு மாமா
காட்டு மாடு மேயுது பாரங்கே என் ஆசை மாமா
காதல் எல்லாம் நடக்குது பாரங்கே!"

நாயகி:
"தோப்பில் மாடு மேய்ந்தால் என்ன
காடு வீணா போனால் என்ன
தோகை மயிலே எந்தன் கிட்டே வா என் ஆசை மானே
சுகமும் பெறலாம் சும்மா கிட்டே வா"

மகிழ்ச்சியை வெள்ளமாகப் பெருக்கும் பாடல் என்று ஒலிபரப்பாளர்
குறிப்பட்டதைப் பாடல் உண்மையாக்கியது!

பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டையார்
----------------------------------------------------------------------------------------
9.
நாத பேதமில்லா இசை நாயகன் திரு.T.M. செளந்தரராஜன் அவர்களும், திருமதி
S.ஜானகி அவர்களும் பாடிய பாடல் அடுத்த தெரிவாக ஒலிபரப்பானது

ஒரு காலத்தில் அனைவரையும் கலக்கிய பாடல்தான் அது!

பாடல் இடம் பெற்ற படம்: பூக்காரி

S.ஜானகி:
"காதலின் பொன் வீதியில்
காதலன் பண் பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் - நான்
கண்ணோடு உறவு கொண்டேன்"

T.M. செளந்தரராஜன்:
"காதலின் பொன் வீதியில்
நான் ஒரு பண் பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
கண்ணோடு ஒருத்தி வந்தாள்"

சொல்லவும் வேண்டுமா?
இந்தத் தெரிவும் அருமையான ஒன்றுதான்!
----------------------------------------------------------------------------------------
நிகழ்ச்சியின் முடிவில், ஒலிபரப்பாளர் திரு.R.G.லக்ஷ்மி நாராயணா அவர்கள் ஒலித்த
முத்தான பாடல்களில் மிகவும் சிறந்த பாடல் என்று, "அனங்கன், அங்கஜன், அன்பன்
வசந்தன் என வணங்கும் என் உயிர் மன்னவா" என்று ஒலித்த பாடலைக் குறிப்பிட்டு
திருவாளர் ரவீந்திரன் அவர்களைப் (அதாங்க நம்ம ரவி அவர்களை) பாராட்டினார்

அதோடு இப்படி அசத்தலாகக் குறிபிட்டு தனது ஒலிபரப்பை அவர் நிறைவு செய்தார்

"ரவீ, காற்றலையில் உருவான இந்த பந்தம் உறுதியானது. தொடரட்டும் உங்கள் சேவை!"
---------------------------------------------------------------------------------------
முழு நிகழ்ச்சியையும் கேட்டு மகிழச் சுட்டியைக் கொடுத்துள்ளேன்

சுட்டி இங்கே!



முழு நிகழ்ச்சியைக் கேட்கவும் தரவிறக்கம் செய்யவும் சுட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன!

இடைச்சேர்க்கை:
வ.எண் திரைப்படப் பெயர் திரைப்பாடல் பாடியவர்கள், இசையமைத்தவர் பெயர்
1 மகாசக்தி மாரியம்மன் மகரந்தம் தான் ஊதும் எம்.பாலமுரளி கிருஷ்ணா,
கே.வி.மகாதேவன்,1986

2 கண்காட்சி அனங்கன் அம்புஜன் ஏ.பி.நாகராஜன்
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எல்.ஆர்.ஈஸ்வரி, குன்னக்க்குடி வைத்தியநாதன்,1971

3 அவள் தந்த உறவு மஞ்சள் இட்ட நிலவாக பி.சுசீலா, முத்துராமன்,
எம்.எஸ்.விஸ்வநாதன்,1978

4 கர்ணன் போய் வா மகளே சூலமங்களம் ராஜலட்சுமி,எம்.எஸ்.வி.,
டி.கே.ராமமூர்த்தி, 1964,

5 இருவர் உள்ளம் புத்திசிகாமணி பெத்த ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி,
கே.வி.மகாதேவன்,1963

6 மாதவி தோட்டக்கார சின்னமாமா சீர்காழி கோவிந்தரராஜன், எம். எஸ்.ராஜேஸ்வரி,1959,

7 உங்கள் விருப்பம் மஞ்சள் பூசி மஞ்சம் கோவை சௌந்திரராஜன்,
எல்.ஆர்.அஞ்சலி, விஜயபாஸ்கர், 1974

8 வள்ளி தெய்வானை மலர்களில் ரோஜா தனசேகர், மல்லிகா,என்.ஸ்.தியாகராஜன்,1974

9 பூக்காரி காதலின் பொன் வீதியில் டி.எம்.சௌந்திரராஜன்,
எஸ்.ஜானகி, எம்.எஸ்.விஸ்வநாதன், 1973,
-------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

25 comments:

வேலன். said...

கோவை மாவட்டத்தில் உள்ள 36 லட்சம் மக்களுக்கும் தெரிந்தவர்களைப்
பட்டியல் இட முயன்றால், திரு.கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்கள்,
திருமதி வனிதா மோகன் அவர்கள், டாக்டர் G.பக்தவட்சலம் அவர்கள்,
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு.கிருஷ்ணன் அவர்கள், தொழில் அதிபர்.
திரு.என்.மகாலிங்கம் அவர்கள் தொழில் அதிபர்.திருஜி.கே சுந்தரம் அவர்கள்
தொழில் அதிபர்.திரு.S.V.பாலசுப்பிரமணியன் அவர்கள், அன்னபூர்னா
திரு ஸ்ரீனிவாசன் அவர்கள், கவிஞர்.கவிதாசன் அவர்கள், எழுத்தாளர்
திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் என்று பத்துப் பெயர்கள் சட்டென்று
மனக்கண் முன் வந்து நிற்கும்.//

இவர்களை தவிர முக்கியமானவர் ஒருவரின் பெயர் விடுபட்டுள்ளது. அவரை வலைப்பூ உபயோகிப்பவர்மட்டும் அல்ல - வகுப்பறை மாணவர்கள் அனைவரும் அறிவர். அவர் வேறு யாருமல்ல - நமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியர் திரு.sp.vr.Subbiah அவர்கள்.
கோவை என்றால் ஆசிரியர் பெயர்தான்
முதலில் நினைவுக்கு வரும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

SP.VR. SUBBIAH said...

////வேலன். said...
கோவை மாவட்டத்தில் உள்ள 36 லட்சம் மக்களுக்கும் தெரிந்தவர்களைப்
பட்டியல் இட முயன்றால், திரு.கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்கள்,
திருமதி வனிதா மோகன் அவர்கள், டாக்டர் G.பக்தவட்சலம் அவர்கள்,
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு.கிருஷ்ணன் அவர்கள், தொழில் அதிபர்.
திரு.என்.மகாலிங்கம் அவர்கள் தொழில் அதிபர்.திருஜி.கே சுந்தரம் அவர்கள்
தொழில் அதிபர்.திரு.S.V.பாலசுப்பிரமணியன் அவர்கள், அன்னபூர்னா
திரு ஸ்ரீனிவாசன் அவர்கள், கவிஞர்.கவிதாசன் அவர்கள், எழுத்தாளர்
திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் என்று பத்துப் பெயர்கள் சட்டென்று
மனக்கண் முன் வந்து நிற்கும்.//
இவர்களை தவிர முக்கியமானவர் ஒருவரின் பெயர் விடுபட்டுள்ளது. அவரை வலைப்பூ உபயோகிப்பவர்மட்டும் அல்ல - வகுப்பறை மாணவர்கள் அனைவரும் அறிவர். அவர் வேறு யாருமல்ல - நமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியர் திரு.sp.vr.Subbiah அவர்கள்.
கோவை என்றால் ஆசிரியர் பெயர்தான்
முதலில் நினைவுக்கு வரும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.////

இதெல்லாம் டூ மச் அல்லது த்ரீ மச் வேலன்! என்னைத் தெரிந்தவர்கள் வெகு சிலரே! 36 லட்சம் மக்களும் அறிந்திருப்பவர் எனும் கோதாவில் இருந்தால் பதிவுகள் எழுத எனக்கெப்படி நேரம் இருக்கும்?

Covai Ravee said...

ரவீந்திரா....... உமது பாடல் தொகுப்பும், விளக்கமும் மற்றவர்கள் உணர முடியா வண்ணம் உயரத்தில் இருக்கிறது.... இசையின் ஆழம் அறிந்தவர்கள் மட்டுமே உமது முத்தையும் உணர முடியும். இசைக்காக தன்னை அர்பணிக்க ஒரு 'தனி மனது' தேவை. அது உமக்கு இருப்பதாக தெள்ள தெளிவாக புரிகிறது. தொடரட்டும் உமது இசை பணி.

ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா

Covai Ravee said...
This comment has been removed by the author.
Covai Ravee said...

வாத்தியார் ஐயா,

நிகழ்ச்சி நடந்த தேதி 10.01.2009 அன்று சனிக்கிழமை பௌர்னமி நாளில் ஒலிப்பரப்பானது. உடனே அறிவிபாளர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் தான் மேலே உள்ளது. அந்த கடிதத்தை இங்கே வெளியிடுவதில் இந்த பதிவிற்க்கு விஷேசம். உங்களின் எழுத்துக்கள், படைப்புக்கள் எல்லாவற்றையும் படிக்கும் வாசகர்களில் அடியேனும் ஒருவன். எனது ஆக்கத்தை கேட்டு இவ்வளவு விரைவில் பதிவாக தந்தற்க்கும் மிக்க மிக்க நன்றி. எப்படி என்ன சொல்வதென்றே தெரியாமல் மகிழ்ச்சியில் திளைக்க்றேன். மீண்டும் என் கருத்துக்களூடன் என் பா.நி.பா தளத்தில் இந்த பதிவின் தொடர்புடன் வருகிறேன்.

மேலும் எனத் கோவை ரசிகர் குழுவின் சுட்டி கொடுத்துள்ளீர்கள். நன்றி. அதனுடன் உங்களூக்கு நான் அனுப்பிய ப்ளேயரின் சுட்டியை சேர்த்தால் கேட்பவருக்கு உதவியாக இருக்கும். இதோ இங்கேயும் நான் வழங்கியிருக்கிறேன்.

http://www.esnips.com/doc/c184da16-ca13-46f1-8655-4e2a94098ec8/RAVEE-283-IM

அன்பர்கள் அனைவுருக்கும் நன்றி.

வேலன். said...

இதெல்லாம் டூ மச் அல்லது த்ரீ மச் வேலன்! என்னைத் தெரிந்தவர்கள் வெகு சிலரே! 36 லட்சம் மக்களும் அறிந்திருப்பவர் எனும் கோதாவில் இருந்தால் பதிவுகள் எழுத எனக்கெப்படி நேரம் இருக்கும்?//

நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அய்யா...கோவை என்னும் குறுகிய வட்டத்தில் பார்க்காதீர்கள். உலக அளவில் பாருங்கள். உலக அளவில் உள்ள இணைய நண்பர்கள் யாரைக்கேட்டாலும் கோவை என்றால் உங்களைத்தான் சொல்வார்கள். உங்களால் கோவைக்குதான் பெருமை.
வாழ்க உங்கள் தொண்டு...வளர்க உங்கள் பணி...
வாழ்க வளமுடன்,
வணக்கத்துடன்,
வேலன்.

Covai Ravee said...

//நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அய்யா...கோவை என்னும் குறுகிய வட்டத்தில் பார்க்காதீர்கள். உலக அளவில் பாருங்கள். உலக அளவில் உள்ள இணைய நண்பர்கள் யாரைக்கேட்டாலும் கோவை என்றால் உங்களைத்தான் சொல்வார்கள். உங்களால் கோவைக்குதான் பெருமை.
வாழ்க உங்கள் தொண்டு...வளர்க உங்கள் பணி... வாழ்க வளமுடன், //

ஐயா வேலன் அவர்கள் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை. ஒலிக்கோப்பில் என் அறிமுகத்திலே இறுதியில் சொல்லியிருப்பேனே கவனித்தீர்களா? கோவை வானொலி நண்பர்கள் அசகாய சூரர்கள் அவர்களின் தேடல்கள் உழைப்பு கவுரிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆகையால் அவர்களின் ஒலித்த்தொகுப்புக்களை தேன் கிண்ணத்தில் வாரம் ஒரு பதிவாக பதிந்து வருகிறேன். இதை எல்லோருக்கும் தெரிந்ததே. சரியாக சொன்ன வேலன் அவர்களுக்கு மிக்க நன்றி. நன்றி.. நன்றி...

வேலன். said...

நன்றி கோவை ரவி அவர்களே...
எனக்கும் பழைய பாடல்கள் பிடிக்கும்.
உங்களுக்காக இந்த சுட்டியை இணைத்துள்ளேன். இதில் பழைய பாடல்கள் உள்ளன.
முகவரி சுட்டி:-http://tfmpage.com/ppp/

வாழ்க வளமுடன்,
வேலன்.

G.Ragavan said...

பூக்காடு சென்றால் செடிகள் நூறு. அந்த நூறு செடிகளில் பூக்கள் ஆயிரம். அந்த ஆயிரம் பூக்களில் நல்லது அல்லது என்று பிரிக்கவியலா நிலை. அப்படியிருக்கையில் உச்சிக் கொப்பிலும் உட்கொப்பிலும் மறைந்திருந்த மணம் மிகுந்த பூக்கள் பலதைப் பறித்து....வாழைநாரோ அழுத்தும்...பஞ்சுநூலோ அறுக்கும்...என்று வருந்தி மேகத்தைத் திரித்து விளக்கம் என்னும் கலங்கரை விளக்கத்தோடு கொடுத்திருக்கின்றீர்களே! கேட்க இரண்டு காதுகள் போதவில்லையே!

G.Ragavan said...

மகாசக்தி மாரியம்மன் படத்திற்கு இசை யார்? இனிமேல் இசையமைப்பாளர் பெயரும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

அனங்கன் அங்கஜன் பாட்டு எனக்கும் மிகவும் பிடிக்கும். பாலுவின் நெய்க்குரலில் பொறித்த அரிசி முறுக்காக எஸ்.ஆர்.ஈசுவரியின் குரலில் விறுவிறுப்பான பாடல். இந்தப் பாடலைத் தனியாகத் தரவிறக்கத் தரயியலுமா?

G.Ragavan said...

மஞ்சள் இட்ட நிலவாக...ஆகா ஆகா.... என்ன ஒரு அருமையான பாடல். நிலவே குளிர்... அந்தக் குளிர் நிலவிற்கும் குளிரெடுக்க வைக்கும் குழைந்த குரலில் பி.சுசீலா பாடுவது சுகம். சுகம். இசை மெல்லிசை மன்னர்தானே?

கர்ணனைப் பற்றிப் பேசினால் பேசிக்கொண்டேயிருக்கலாம். அத்துணை சிறப்பு. சூலமங்கலம் பாடுகையில் ஒரு தாய் பாடிக் கேட்பது போலவே உள்ளது. பொருத்தமான பாடகர்களைத் தேர்வு செய்வதில் மெல்லிசை மன்னருக்கு நிகர் அவரேதான்.

G.Ragavan said...

மஞ்சளிட்ட நிலவாகப் பாடலையும் தரவிறக்கத் தரயியலுமா?

SP.VR. SUBBIAH said...

//////Covai Ravee said...
ரவீந்திரா....... உமது பாடல் தொகுப்பும், விளக்கமும் மற்றவர்கள் உணர முடியா வண்ணம் உயரத்தில் இருக்கிறது.... இசையின் ஆழம் அறிந்தவர்கள் மட்டுமே உமது முத்தையும் உணர முடியும். இசைக்காக தன்னை அர்பணிக்க ஒரு 'தனி மனது' தேவை. அது உமக்கு இருப்பதாக தெள்ள தெளிவாக புரிகிறது. தொடரட்டும் உமது இசை பணி.

ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா//////

அவருடைய பாராட்டுதலை இங்கே தெரிவித்தமைக்கு நன்றி ரவியாரே!

SP.VR. SUBBIAH said...

Covai Ravee said...
வாத்தியார் ஐயா,
நிகழ்ச்சி நடந்த தேதி 10.01.2009 அன்று சனிக்கிழமை பௌர்னமி நாளில் ஒலிப்பரப்பானது. உடனே அறிவிபாளர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் தான் மேலே உள்ளது. அந்த கடிதத்தை இங்கே வெளியிடுவதில் இந்த பதிவிற்கு விஷேசம். உங்களின் எழுத்துக்கள், படைப்புக்கள் எல்லாவற்றையும் படிக்கும் வாசகர்களில் அடியேனும் ஒருவன். எனது ஆக்கத்தை கேட்டு இவ்வளவு விரைவில் பதிவாக தந்தற்கு மிக்க மிக்க நன்றி. எப்படி என்ன சொல்வதென்றே தெரியாமல் மகிழ்ச்சியில் திளைக்கிறேன். மீண்டும் என் கருத்துக்களூடன் என் பா.நி.பா தளத்தில் இந்த பதிவின் தொடர்புடன் வருகிறேன்.

மேலும் எனத் கோவை ரசிகர் குழுவின் சுட்டி கொடுத்துள்ளீர்கள். நன்றி. அதனுடன் உங்களூக்கு நான் அனுப்பிய ப்ளேயரின் சுட்டியை சேர்த்தால் கேட்பவருக்கு உதவியாக இருக்கும். இதோ இங்கேயும் நான் வழங்கியிருக்கிறேன்.
http://www.esnips.com/doc/c184da16-ca13-46f1-8655-4e2a94098ec8/RAVEE-283-IM
அன்பர்கள் அனைவுருக்கும் நன்றி./////

நீங்கள் கேட்டுக்கொண்டபடி சுட்டிகள் இரண்டும் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன ரவி!

SP.VR. SUBBIAH said...

வேலன். said...
இதெல்லாம் டூ மச் அல்லது த்ரீ மச் வேலன்! என்னைத் தெரிந்தவர்கள் வெகு சிலரே! 36 லட்சம் மக்களும் அறிந்திருப்பவர் எனும் கோதாவில் இருந்தால் பதிவுகள் எழுத எனக்கெப்படி நேரம் இருக்கும்?//
நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அய்யா...கோவை என்னும் குறுகிய வட்டத்தில் பார்க்காதீர்கள். உலக அளவில் பாருங்கள். உலக அளவில் உள்ள இணைய நண்பர்கள் யாரைக்கேட்டாலும் கோவை என்றால் உங்களைத்தான் சொல்வார்கள். உங்களால் கோவைக்குதான் பெருமை.
வாழ்க உங்கள் தொண்டு...வளர்க உங்கள் பணி...
வாழ்க வளமுடன்,
வணக்கத்துடன்,
வேலன்./////

என்மீதுள்ள அன்பு உங்கள் கண்ணை மறைக்கிறது. அவ்வளவுதான்!

SP.VR. SUBBIAH said...

//////Covai Ravee said..
//நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அய்யா...கோவை என்னும் குறுகிய வட்டத்தில் பார்க்காதீர்கள். உலக அளவில் பாருங்கள். உலக அளவில் உள்ள இணைய நண்பர்கள் யாரைக்கேட்டாலும் கோவை என்றால் உங்களைத்தான் சொல்வார்கள். உங்களால் கோவைக்குதான் பெருமை.
வாழ்க உங்கள் தொண்டு...வளர்க உங்கள் பணி... வாழ்க வளமுடன், //
ஐயா வேலன் அவர்கள் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை. ஒலிக்கோப்பில் என் அறிமுகத்திலே இறுதியில் சொல்லியிருப்பேனே கவனித்தீர்களா? கோவை வானொலி நண்பர்கள் அசகாய சூரர்கள் அவர்களின் தேடல்கள் உழைப்பு கவுரிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆகையால் அவர்களின் ஒலித்த்தொகுப்புக்களை தேன் கிண்ணத்தில் வாரம் ஒரு பதிவாக பதிந்து வருகிறேன். இதை எல்லோருக்கும் தெரிந்ததே. சரியாக சொன்ன வேலன் அவர்களுக்கு மிக்க நன்றி. நன்றி.. நன்றி.../////

உங்களுக்கும் என் மீதுள்ள அன்பின் காரணமாக உண்மை நிலவரம் கண்ணில் படவில்லை!
நான் சாதாரணமானவன் அவ்வளவுதான்!

SP.VR. SUBBIAH said...

/////வேலன். said...
நன்றி கோவை ரவி அவர்களே...
எனக்கும் பழைய பாடல்கள் பிடிக்கும்.
உங்களுக்காக இந்த சுட்டியை இணைத்துள்ளேன். இதில் பழைய பாடல்கள் உள்ளன.
முகவரி சுட்டி:-http://tfmpage.com/ppp/
வாழ்க வளமுடன்,
வேலன்.//////

பழைய திரை இசைப் பாடல்களுக்கான சுட்டியைக் கொடுத்தமைக்கு நன்றி வேலன்!

SP.VR. SUBBIAH said...

G.Ragavan said...
பூக்காடு சென்றால் செடிகள் நூறு. அந்த நூறு செடிகளில் பூக்கள் ஆயிரம். அந்த ஆயிரம் பூக்களில் நல்லது அல்லது என்று பிரிக்கவியலா நிலை. அப்படியிருக்கையில் உச்சிக் கொப்பிலும் உட்கொப்பிலும் மறைந்திருந்த மணம் மிகுந்த பூக்கள் பலதைப் பறித்து....வாழைநாரோ அழுத்தும்...பஞ்சுநூலோ அறுக்கும்...என்று வருந்தி மேகத்தைத் திரித்து விளக்கம் என்னும் கலங்கரை விளக்கத்தோடு கொடுத்திருக்கின்றீர்களே! கேட்க இரண்டு காதுகள் போதவில்லையே!/////

வாருங்கள் ஜீரா. 'மேகத்தைத் திரித்து' என்று உயர்ந்த சிந்தனையுடன் உங்கள் பின்னூட்டம் அசத்தலாக இருக்கிறது. நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////G.Ragavan said...
மகாசக்தி மாரியம்மன் படத்திற்கு இசை யார்? இனிமேல் இசையமைப்பாளர் பெயரும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
அனங்கன் அங்கஜன் பாட்டு எனக்கும் மிகவும் பிடிக்கும். பாலுவின் நெய்க்குரலில் பொறித்த அரிசி முறுக்காக எஸ்.ஆர்.ஈசுவரியின் குரலில் விறுவிறுப்பான பாடல். இந்தப் பாடலைத் தனியாகத் தரவிறக்கத் தரயியலுமா?/////

பாடல் அசத்தலாக இருப்பதைப் பார்த்தால், இசை திரையுலக ஜாம்பவான்.திரு.கே.வி. மகாதேவன் அவர்களுடையதாகத்தான் இருக்கும். தெரியவில்லை. விசாரித்துச் சொல்கிறேன் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////G.Ragavan said...
மஞ்சள் இட்ட நிலவாக...ஆகா ஆகா.... என்ன ஒரு அருமையான பாடல். நிலவே குளிர்... அந்தக் குளிர் நிலவிற்கும் குளிரெடுக்க வைக்கும் குழைந்த குரலில் பி.சுசீலா பாடுவது சுகம். சுகம். இசை மெல்லிசை மன்னர்தானே?//////

அவள் தந்த உறவு படத்தின் இசையமைப்பாளர் யாரென்று தெரியவில்லை. கேட்டுச் சொல்கிறேன் நண்பரே!
-----------------------------------------------------------------------------
///////கர்ணனைப் பற்றிப் பேசினால் பேசிக்கொண்டேயிருக்கலாம். அத்துணை சிறப்பு. சூலமங்கலம் பாடுகையில் ஒரு தாய் பாடிக் கேட்பது போலவே உள்ளது. பொருத்தமான பாடகர்களைத் தேர்வு செய்வதில் மெல்லிசை மன்னருக்கு நிகர் அவரேதான்./////

கர்ணன் படத்திற்கு இசையமைத்தவர். கே,வி,மாகாதேவன் அவர்கள் என்று நினைக்கிறேன். அதையும் விசாரித்து உறுதி செய்கிறேன்!

SP.VR. SUBBIAH said...

////G.Ragavan said...
மஞ்சளிட்ட நிலவாகப் பாடலையும் தரவிறக்கத் தரயியலுமா?/////

கோவை ரவி அவர்களைக் கேட்டு வாங்கித் தருகிறேன் நண்பரே!

Covai Ravee said...

வாங்க ஜி.ராகவன் சார்,

என்னைவிட அழகான விளக்கங்கள் தந்து அசத்தீட்டீங்க தாங்கள் கேட்ட அணைத்து பாடல்களூம் உங்கள் முகவரிக்கு கூடிய சீக்கிரம் அனுப்பிவைக்கப்படும். கவலையே படாதீர்கள்.

மேலும் பாடல்களின் தகவல்கள் எனக்கு தெரிந்த வரை வானொலி நிலையத்தாருக்கும் அனுப்பிவைத்தேன் நேரமின்மை காரணத்தால் அறிவிப்பாளர் வாசிக்கவிலை என்று நினைக்கிறேன். மேலும் வாத்தியாருக்கும் அனுப்பி வைத்தேன் அவர் சரியாக கவனிக்கவில்லை என்று கருதுகிறேன். இதோ இங்கே..

1 மகாசக்தி மாரியம்மன், மகரந்தம் தான் ஊதும், எம்.பாலமுரளி கிருஷ்ணா, இசை:கே.வி.மகாதேவன்,1986

2 கண்காட்சி, அனங்கன் அம்புஜன்
ஏ.பி.நாகராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எல்.ஆர்.ஈஸ்வரி
3 அவள் தந்த உறவு, மஞ்சள் இட்ட நிலவாக, பி.சுசீலா, முத்துராமன்

4 கர்ணன், போய் வா மகளே
சூலமங்களம் ராஜலட்சுமி

5 இருவர் உள்ளம், புத்திசிகாமணி பெத்த, ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி

6 மாதவி, தோட்டக்கார சின்னமாமா
சீர்காழி கோவிந்தரராஜன், எம். எஸ்.ராஜேஸ்வரி,

7 உங்கள் விருப்பம், மஞ்சள் பூசி மஞ்சம், கோவை சௌந்திரராஜன், எல்.ஆர்.அஞ்சலி

8 வள்ளி தெய்வானை, மலர்களில் ரோஜா, தனசேகர், மல்லிகா

9 பூக்காரி, காதலின் பொன் வீதியில்
டி.எம்.சௌந்திரராஜன், எஸ்.ஜானகி

SP.VR. SUBBIAH said...

/////மேலும் வாத்தியாருக்கும் அனுப்பி வைத்தேன் அவர் சரியாக கவனிக்கவில்லை என்று கருதுகிறேன். இதோ இங்கே../////

ஒன்பது பாடல்களுக்கும், பாடியவர்க்ளின் பெயர்கள், படத்தின் பெயர்கலைக் குறிப்பிருக்கிறேன் ரவி. பதிவை மீண்டும் ஒருமுறை பாருங்கள்.

ஜீரா கேட்பது இசையமைப்பாளரின் பெயர்களை. நீங்கள் இசையமைத்தவர்களின் பெயர்களை மட்டும் சொன்னால் போதும்!
அதோடு அவர் இரண்டு பாடல்களுக்குச் சுட்டி கேட்டுள்ளார் முடிந்தால் அதையும் கொடுங்கள்

Covai Ravee said...

//ஒன்பது பாடல்களுக்கும், பாடியவர்க்ளின் பெயர்கள், படத்தின் பெயர்கலைக் குறிப்பிருக்கிறேன் ரவி. பதிவை மீண்டும் ஒருமுறை பாருங்கள்.

ஜீரா கேட்பது இசையமைப்பாளரின் பெயர்களை. நீங்கள் இசையமைத்தவர்களின் பெயர்களை மட்டும் சொன்னால் போதும்!
அதோடு அவர் இரண்டு பாடல்களுக்குச் சுட்டி கேட்டுள்ளார் முடிந்தால் அதையும் கொடுங்கள்//

ஐயா, இசையமைப்பாளர் பெயர்கள் அடங்கிய இடைசேர்க்கை பார்த்தேன். நன்றி. ஜிரா அவர்கள் கேட்ட பாடல்கள் சுட்டி அனுப்பிவிட்டேன் பெற்றுக்கொண்டார்.

SP.VR. SUBBIAH said...

//////Covai Ravee said...
//ஒன்பது பாடல்களுக்கும், பாடியவர்க்ளின் பெயர்கள், படத்தின் பெயர்கலைக் குறிப்பிருக்கிறேன் ரவி. பதிவை மீண்டும் ஒருமுறை பாருங்கள்.
ஜீரா கேட்பது இசையமைப்பாளரின் பெயர்களை. நீங்கள் இசையமைத்தவர்களின் பெயர்களை மட்டும் சொன்னால் போதும்!
அதோடு அவர் இரண்டு பாடல்களுக்குச் சுட்டி கேட்டுள்ளார் முடிந்தால் அதையும் கொடுங்கள்//
ஐயா, இசையமைப்பாளர் பெயர்கள் அடங்கிய இடைசேர்க்கை பார்த்தேன். நன்றி. ஜிரா அவர்கள் கேட்ட பாடல்கள் சுட்டி அனுப்பிவிட்டேன் பெற்றுக்கொண்டார்.//////

தகவலுக்கு நன்றி ரவி!

பல்சுவை அரங்கத்தின் உறுப்பினர்கள்

ஒதுக்கீடு இல்லாமல் ஒரு வகுப்பறை!