பல்சுவை அரங்கத்தின் உறுப்பினர்கள்

Monday, August 17, 2009

லட்டு-ஜிலேபி-ஜாமூன்-பாஸந்தி-பாதாம்அல்வா-ரசமலாய்!


லட்டு-ஜிலேபி-ஜாமூன்-பாஸந்தி-பாதாம்அல்வா-ரசமலாய்!

சுதந்திரதின விடுமுறை உற்சாகத்தில் உண்மைத் தமிழர் இருப்பதால், இன்று அரட்டைக் கச்சேரி இல்லை.

Over to Post
-----------------------------------------------------------------------
ஏன் பெண் உறங்கவில்லை!

கவியரசர் அவர்கள் எழுதிய ஒரு பாட்டைக் கேட்டுவிட்டு இளைஞர்கள்
பலர் சேர்ந்து, அவரைப் பிடித்துக் கொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்..

பாடலின் முதல் பன்னிரெண்டு வரிகளைப் பாருங்கள்.

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனை இல்லை .. சிந்தனை இல்லை
காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட
நாள் முதலாய்
பெண்
உறங்கவில்லை .. பெண் உறங்கவில்லை.

இளைஞர்கள் கேட்டது இதுதான்.

"உணர்வுகள் என்பது ஆண், பெண் என்று இருபாலருக்கும் பொதுவானதுதானே!
அப்படியிருக்கையில், உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை என்று நீங்கள் பெண்ணை மட்டும் எப்படிச் சிறப்பித்துக் கூறலாம்? அதே காதல் உணர்வினால் அவளுடைய காதலனும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டானா? சொல்லுங்கள்! இவள் உறங்காதது போல அவனும் உறங்கியிருக்க மாட்டானில்லையா? அப்படியிருக்கும்
போது பெண் உறங்கவில்லை என்று பெண்ணை மட்டும் ஏன் உயர்த்தி எழுதினீர்கள்? காதல் உணர்வில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுத் தூக்கமின்றித் தவிப்பவன் ஆண்தான். அது உங்களுக்குத் தெரியாதா?"" என்று கேட்டுத் துளைத்து எடுத்து விட்டார்கள்.

அவர் நடத்திக் கொண்டிருந்த தென்றல் என்ற பத்திரிக்கை மூலமாகத்தான் இந்தக்
கேள்வியைப் பல ஆண் வாசகர்கள் கேட்டு எழுதியிருந்தார்கள்.
கடிதங்கள் நூற்றுக் கணக்கில் வந்து குவிந்து விட்டது.

நம் கவியரசர் அவர்கள் நல்லதாக ஒரு பதிலைக் கொடுத்து அனைவரையும்
சமாதானமடையச் செய்தார்.

அதற்கு முன் வெளிவந்திருந்த வானம்பாடி என்ற படத்தில், தான் எழுதியிருந்த பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பதில் எழுதியிருந்தார்.

"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!

பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்

பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!"


என்று துவங்கும் பாடல் அது. அந்தப் பாட்டின் இடையில்

"அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!

படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தைப்
படைக்காமல் நிறுத்தி வைப்பான்!"

என்ற வரிகள் வரும். அதைச் சுட்டிக் காட்டிக் கவியரசர் இப்படி எழுதினார்:

"பெண் குலத்தைப் படைபதை நிறுத்திவை" என்று ஒரு காதலன் துக்க உணர்வு
மேலோங்கிப் பாடுவதாக எழுதியிருந்தேன்.அவன் ஒருவனுடைய உணர்வுகளுக்காக மொத்த பெண் குலமும் என்ன செய்யும்? கடவுளென்ன
அவன் வைத்த ஆளா? இவனுக்காக அவர் எப்படி பெண்ணைப் படைப்பதை நிறுத்துவார்?.

இதையே ஒரு பெண் குரல் கொடுத்து ஆண்களைப் படைப்பதை நிறுத்து
கடவுளே என்றால் என்ன ஆகும்?

ஆனாலும் அவன் பாட்டில் தவறு இல்லை தன் உணர்வுகளின் தாக்கத்தினால்
அவன் அப்படிப் பாடுகின்றான். அவனுடைய சூழ்நிலை அப்படி.

அதே போன்ற சூழ்நிலையில் தான் அந்தப் பெண்ணும், தன் உணர்வுகள் மேலோங்கப் பெண் உறங்கவில்லை என்கிறாள்! அதைத் தவறென்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், இதுவும் தவறுதான். அது தவறில்லை என்றால்
இதுவும் தவறில்லை. என்ன சொல்கிறீர்கள்?" என்று வந்த எதிர்ப்பிற்கு சரியான கேள்வி ஒன்றைக்கேட்டு அவர்களையே உணர வைத்தார்.

மேலும் அதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த தென்றல் இதழில் இப்படி எழுதினார்.

"இந்த வானம்பாடிப் படப்பாடல் வந்த போது ஒரு பெண் கூட என்னைக் கேள்வி
கேட்கவில்லை. நீங்கள் எத்தனையோ பேர் கேட்டு எழுத நான் பதில்சொன்னேன்.
உங்களுக்கு மேலும் ஒன்று சொல்வேன். உணர்வுகள் பொதுவானவை. உணர்வுகளுக்கு ஆண், பெண் என்கின்ற பேதம் கிடையாது! திரைப்படப் பாடல்கள் எல்லாம் படத்தின் சூழ்நிலைக்கு, நாயகன், நாயகியின் மன உணர்வுகளுக்கு எழுதப்படுபவை. அவைகளை நீங்கள் அந்தப் பாத்திரங்களின் தன்மையோடு மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்"

என்ன நிதர்சனமான உண்மை!
----------------------------------------------------------------------------

பாவாடை சட்டையும் பரமசிவன் வரமும்

ஒரு சம்பவத்தைச் சுவையாகச் சொல்வதில் கதாசிரியர்களுக்கும் கவிஞர்களுக்குமிடையே மிகுந்த வித்தியாசம் இருக்கிறது. பதினைந்து வரிகளில் சொல்லவேண்டியதை, உணர்வு மேலோங்கிடச் சொல்வதற்குக் கதாசியருக்கு நாற்பது வரிகள் தேவைப்படும்.ஆனால் சிறந்த கவிஞரால் அதை நான்கே வரிகளில் அசத்தலாகச் சொல்லிவிட முடியும்.

எப்படியென்று பார்ப்போம்.

ஒரு ஏழைத் தாய். வறுமைதான் அவளுக்குத் துணைவன்.வீடுகளில் வேலை செய்து அரைவயிற்றுக் கஞ்சியோடு காலத்தை அவள் ஓட்டிக் கொண்டிருந்த நிலையில், அவளுடைய பதினோரு வயது நிரம்பிய மகள் வயதிற்கு வந்து விட்டாள். அவளுக்கு மகளாகப் பிறந்துவிட்ட அந்தப் பாவப்பட்ட சிறுமிக்கு இருப்பது இரண்டே உடைகள்தான் .ஒன்றை அவள் அணிந்து கொண்டிருக்கின்றாள்.மற்றொன்று வீட்டு வாசலில் உள்ள கொடியில் காய்ந்து கொண்டிருக்கிறது. பூப்படைந்துவிட்ட அந்தப் பெண்ணின் அவசரத் தேவைக்கு மற்றுமொரு மாற்று உடை இல்லாத நிலை. அந்த இருவருக்கும் ஒரே ஆதரவான அந்தப் பெண்மணியின் சகோதரனோ - காலக் கோளாறால் தற்சமயம் சிறையில் இருக்கிறான். அவன் இருந்திருந்தாலாவது இவர்களது வாட்டத்தைப் போக்குவான் அதை எண்ணி அந்த அன்புத்தாய் கண்ணீரோடு குடிசை வாசலில் அமர்ந்திருக்கின்றாள்.

தாயின் இந்தப் பரிதாப நிலைக்கு மனம் உருகி கவிஞர் வைரமுத்து
அவர்கள் பளிச்சென்று நம் மனதில் தைக்கும் விதமாகச் சிலவரிகளிலேயே இப்படிச் சொன்னார்

"பாவாடை சட்டையோ பரமசிவன் தந்தவரம்!
தாவணிக்கு எங்குபோவேன்?

தாவணி வேணுமின்னா
மாமன் வரவேணும்
மாமன் வரவேணுமின்னா -
ஜாமீனில் வரவேணும்!"

என்ன அற்புதமான வெளிப்பாடு பாருங்கள்!

நச்' சென்று இருக்கிறதல்லவா?
----------------------------------------------------------------------------------
கவிஞர் சிவல்புரி சிங்காரம்

நிலைமாறிய தமிழ்ப் படங்கள்

தாய், தந்தை,மனைவி, மக்கள் என்று குடும்ப உறுப்பினர்கள்
அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிக்கும் படியாகவா இன்றைய திரைப்படங்கள் இருக்கின்றன? நிச்சயமாக இல்லை!

தொலைக்காட்சியில் சில காட்சிகளைத் தங்கள் குழந்தைகளுடன் பார்க்கும் பெற்றோர்கள் நெளிய வேண்டியதிருக்கிறது, தலை குனிய வேண்டியதிருக்கிறது, அல்லது வேறு சானலை மாற்றவேண்டியதிருக்கிறது!

இந்த நாட்டு நடப்பு அவலங்களையெல்லாம் பார்த்த நமது கவிஞர் சிவல்புரியார் அவர்கள், கவியரசர் கண்ணதாசன் காலத்துப் பாடல் களைத்தன் மனதிற்குள் ஒரு ஆதங்கத்தோடு வைத்துக்கொண்டு தற்காலத் திரைபடப் பாடல்களையும், படங்ளையும் கீழ்க்கண்ட தனது பாடலின் மூலம் ஒரு பிடி பிடித்திருக்கின்றார்.

"நீயின்றி திரையுலகம் மாறிப் போச்சு
நிழல்கூட நிஜமென்று தேறிப் போச்சு
வாயினின்றி வரும்சொல்லே கவிதை யாச்சு

வளர்தமிழில் கொச்சைத் தமிழ் கூடலாச்சு

தாயோடு தாரத்தைச் சேர்த்து வைத்துத்

தமிழ்ப் படத்தைப் பார்க்கும்நிலை மாறிப்போச்சு"


சம்பந்தப்பட்டவர்கள் கண்களில் இந்தப் பாடல் பட்டு அவர்கள் ஓரளவாவது திருந்தினால் அது தமிழ் மக்களாகிய நாம் செய்த பாக்கியம் என்று கொள்வோம்!
-----------------------------------------------------------------------------------------
படமும் செய்தியும்
மனிதனுக்கு மட்டுமா? யானைக்கும் உண்டு!


நன்றி தினமலர்!
-------------------------------------------------------------------------------------------

நகைச்சுவை:

ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மகன், பணம் வேண்டுமென்று கேட்காமல் கேட்டு எழுதிய கடிதமும், அதற்கு அவன் தந்தை எழுதிய பதில் கடிதமும் கீழே உள்ளன.
படித்து, (முடிந்தால்) மகிழவும்

Son And Father Exchange Letters:
Son to his father
Dear Dad,
$chool i$ really great. I am making lot$ of friend$ and $tudying very hard. With all my $tuff, I $imply cannot think of anything I need, $o if you would like, you can ju$t $end me a card, a$ I would love to hear from you.
Love,
Your $on.

Father replies
Dear Son,
I kNOw that astroNOmy, ecoNOmics, and oceaNOgraphy are eNOugh to keep even an hoNOr student busy. Do NOt forget that the pursuit of kNOwledge is a NOble task, and you can never study eNOugh.
Love,
Your Dad
-----------------------------------------------------------------

அவசியமான மூன்று ஈ’க்களும், எஃப்’ களும்
(E & F )


--------------------------------------------------------------------------------
கனவுக் கன்னி?
ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V

அம்மணி யாரென்று தெரிகிறதா?
Sau saal pahele...muje tumse pyaruka புகழ். காதல் படங்களாக நடித்துத் தள்ளியவர்
இது மூத்த குடிமகன்களுக்காக மட்டுமே. இளைய திலகங்கள் உற்றுப் பார்ப்பதைத் தவிர்க்கவும்!
V
V
V
V
இளவட்டங்களுக்கான படம் அடுத்து உள்ளது!

V
V
V
V
V

அம்மணி யாரென்று தெரிகிறதா?
அடுத்த படம் தவப்புதல்வருக்காக!

V
V
V
V
V
V
V
V
V

ஊனா தானா கணக்கில் ஜிலேபி நம்பர் 5
V
V
V
சம உரிமைக் கணக்கில் அடுத்த படம்!
V
V
V
V
V
V
V
V
V
V

====================================================

வாழ்க வளமுடன்!

Monday, August 10, 2009

லட்டு-ஜிலேபி-ஜாமூன்-பாஸந்தி-பாதாம்அல்வா-ரசமலாய்!



லட்டு-ஜிலேபி-ஜாமூன்-பாஸந்தி-பாதாம்அல்வா-ரசமலாய்!


கடந்த பதினைந்து நாட்களாக அடியவன் தேடிக்கொண்டிருந்த தவப்புதல்வர்
உண்மைத் தமிழர் அவராகவே வந்து சேர்ந்துவிட்டார்.
அகண்டவரிசை இணைய இணைப்பில் பிரச்சினையாம்.

அப்பனே முருகா, அவருக்கு மட்டும் ஏன் தொடர் சோதனைகள்?
அவர் கொஞ்சம் நிம்மதியாக இருக்க உதவி செய்!

Over to Post
=============================================================
கவியரசரும் இன்றைய கவிஞர்களும்
ஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுதி, இசையமைக்கும் வேலை நடந்து
கொண்டிருந்தது. தாயாரிப்பாளர், இயக்குனர், கதை-வசனம் எழுதுபவர்,
இசையமைப்பாளர், இவர்களோடு நமது கவியரசரும் அமர்ந்து, பணியைத்
துவக்கினார்கள்.

இயக்குனர், பாடல் இடம் பெறும் சூழ்நிலையைச் சொன்னார்.
படத்தின் நாயகி தன் மனதைக் கவர்ந்துவிட்ட நாயகனை நினைத்துத் தன்
கனவில் பாடுவது போன்ற காட்சி.

கவிஞர், அந்தக் காட்சியைத் தன் மனதில் வாங்கிக் கொண்டு பத்தே நிமிங்களில்
பாடலை எழுதிக் கொடுத்து விட்டார்.

பாடல் இப்படித் துவங்கும்:

படம் - பாத காணிக்கை (வருடம்1962)

"அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா

எந்தன் மனதைத் தந்து செல்லவா

உந்தன் மனதைக் கொண்டு செல்லவா"


படத்தில் நாயகன், நாயகியின் தாய்மாமன் மகன்.

மாமாவை அம்மான் என்பார்கள். மாமாவின் மனைவியை அத்தை என்பார்கள்.
அம்மாவின் தம்பி - அம்மா + ன் = அம்மான். அதுதான் தூய தமிழ்ச் சொல்.
எங்கள் பகுதிகளில் அம்மாவின் சகோதரர்களை அப்படித்தான் அழைப்போம்.
அம்மாவிற்கு ஒரு தம்பிதான் என்றால் அம்மான். ஒருவர் அம்மாவின் மூத்த
சகோதரர், மற்றொருவர் இளைய சகோதரர் என்றால், பெரியவர் பெரிய அம்மான்,
சின்னவர் சின்ன அம்மான்.

அந்த உறவு முறைகளை கொஞ்சம் மறந்து விட்டுப் பாட்டிற்கு வருவோம்.

காதலி எதைத் தருவதாகச் சொல்கிறாள். தன் மனதைத் தருவதாகச் சொல்கிறாள்.
எதை எடுத்துக் கொண்டு போக விரும்புவதாகச் சொல்கிறாள். நாயகனின் மனதை!

அடடா, இதைவிடப் பெரியதாக ஒரு ஆடவனுக்கு என்ன கிடைத்து விட முடியும்?
அதுவும் ஒரு பெண்ணே சொல்லும் போது.!

மீண்டும் அந்த வரிகளைப் பாருங்கள்:

"எந்தன் மனதைத் தந்து செல்லவா
உந்தன் மனதைக் கொண்டு செல்லவா"

இங்கேதான் கவியரசரின் மேன்மை புலப்படும். அதோடு என்ன எளிமையான சொல்
விளையட்டுப் பாருங்கள்

இப்போது அந்தப் பாடலில் உள்ள சமூக நோக்கிற்கு வருகிறேன்

"மல்லிகைமலர் சூடிக் காத்து நிற்கவா
மாலைஇளம் தென்றல்தனைத் தூது விடவா

நல்லதோர் நாள்பார்த்துச் சேதி சொல்லவா

நாட்டோரைச் சாட்சிவைத்து வந்து விடவா?"


அவள் மல்லிகை மலர்சூடி அவனுக்காக் காத்து நிற்கட்டும் அல்லது அவனை வரச்
சொல்லி தென்றலைத் தூதாக அனுப்பட்டும். ஆனால் அவன் கரம் பிடித்து
இல்வாழ்க்கைக்குப் போவதென்றால் நான்கு பேர்களைச் சாட்சி வைத்து,
அதாவது அவனை முறைப்படி திருமணம் செய்து கொண்டுதான் போக வேண்டும்.
இதுதான் பாட்டிலுள்ள செய்தி!

இரவோடு இரவாக ஓடிப்போய் விடக்கூடாது. இது எல்லாப் பெண்களுக்குமே
உள்ள நியதி.

காதல் திருமணமாக இருந்தால்கூட, நான்கு நண்பர்களை சாட்சியாக வைத்துக்
கொண்டுதான் – காதல் திருமணத்திற்கென்று உள்ள முறைப்படி திருமணம்
செய்து கொண்டுதான் பொகவேண்டும்!

திருட்டுத்தாலி என்பது கூடவே கூடாது!

கவியரசர் மறைந்து 27 வருடங்கள் ஆகிவிட்டன.

அவருக்குப் பிறகு திரைக்கு வந்துள்ள இன்றைய கவிஞர்கள் எப்படிப்
பாட்டெழுதுகிறார்கள்.?

இப்போது வரும் பாடல்களில் பல சமுதாயச் சீரழிவிற்கு வழி வகுப்பதாக உள்ளது.
சமுதாய அக்கறையென்றால் சிலர் கிலோ என்ன விலை என்பார்கள்.

அப்படி மனதை அதிர வைக்கும் பல பாடல்களை என்னால் சுட்டிக் காட்ட முடியும்.
இருந்தாலும் பதிவின் நீளம் கருதி (உங்களின், நேரம் மற்றும் பொறுமை கருதி)
மாதிரிக்கு இரண்டு பாடல்களை மட்டும் கோடிட்டுக் காட்டுகிறேன்.

பாட்டைப் பாருங்கள்:

"கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலமா?
தாலியைத்தான் கட்டிக்கிட்டுப் பெத்துக்கலாமா

பெத்துக்கிட்டுத் தாலியைத்தான் கட்டிக்கலாமா?"


எப்படி இருக்கிறது பாட்டு?

இந்தப் பாடலை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, அதிகமாக மனனம்செய்து பாடியது
சிறுவர்களும், சிறுமியர்களும் என்பது வருந்தக்கூடிய விஷயம்.

சரி, இன்னொரு பாடலையும் தருகிறேன்.

"சிரிச்சுவந்தான் சிரிச்சுவந்தான் சீனாதானா டோய்
சிறுக்கிமகள் சிறுக்கிமகள் தானாப்போனா டோய்!"


ஆகா இவற்றை எழுதியவர்கள் பல்லாண்டு வாழ்ந்து, தமிழ் சமூகத்தை மேம்படுத்தட்டும்!!!

வேறு என்ன சொல்ல முடியும் நம்மால்?
=========================================================
திருவரங்கம் வாலிக்குக் கிடைத்த திருப்புமுனை!

இளைஞராக இருந்த காலத்தில், தமிழ் வசப்பட்டவுடன் வாலியும் சும்மா
இருக்கவில்லை. தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘நேதாஜி” என்னும்
கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார்.

முதல் பிரதியை வெளியிட்டவர் யாரென்று நினைக்கிறீர்கள்? கேட்டால்
அசந்து போவீர்கள். எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்?

அந்தக் காலத்தில் மிகப் பெரிய எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளராக
இருந்த திருவாளர் கல்கி அவர்கள்தான் அந்தப் பத்திரிக்கையை வெளியிட்டுச்
சிறப்பித்ததோடு, வாலியின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையையும்
கொடுத்துவிட்டுப் போனார். தன் கதைகளைப் பல திருப்புமுனைகளோடு
கொண்டு செல்லும் அவர், வாலியின் வாழ்விலும் ஒரு திருப்புமுனையை
ஏற்படுத்தியது அதிசயமா அல்லது தெய்வாதீனமா என்றால் இரண்டையும்
வைத்துக் கொள்ளலாம்.

அன்று திரு.கல்கி அவர்களுடன் திருவாளர் சின்ன அண்ணாமலை அவர்களும்,
திருச்சி வானொலி நிலைய அதிகாரி திரு.பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால்
அடுத்து ஒரு ஏற்றம் வாலியின் வாழ்வில் நிகழ்ந்தது. வானொலிக்கு கதைகள்
நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைக்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

திருவரங்கத்தில் வாலி அவர்கள் நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில்
பல இளைஞர் கூட்டமே பங்கேற்றுக் கொண்டது. அப்படிப் பங்கேற்றுக்
கொண்டவர்களில் ஒருவர்தான் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளராகத்
தன் தனித்தமிழ் நடையால் ராஜ நடைபோட்ட எழுத்தாளர் சுஜாதா!
அவரின் இயற்பெயரும் ரங்கராஜன்தான் என்பது வியப்பிற்குரிய விஷயம்!
=====================================================================

மாறுதலுக்காக இன்று ஒரு நாடகச் செய்தி!

செய்தி பழசுதான். ஆனால் சுவையானது.

அக்காலத்தில் கோவைக்குப் பல நாடகக் குழுவினர் வந்து நாடகங்களை
நடத்தி, கோவை மக்களை மகிழ்விப்பார்கள். விசு, மெளலி, எஸ்.வி.சேகர்,
காத்தாடி ராமமூர்த்தி என்று பலர் தங்கள் குழுவினருடன் வருவார்கள்.
அந்த மகிழ்ச்சியான தருணங்கள் எல்லாம் இப்போது இல்லை.
----------------------------------------------------------------
காத்தாடி நாமமூர்த்தி அவர்களின் நகைச்சுவை நாடகத்தில் பார்த்த காட்சி
ஒன்றை என் நினைவுத்திரையில் இருந்து உங்களுக்கு அளிக்கிறேன்.
மனிதரின் குரல் ஏற்ற இறக்கங்களுடன் அசத்தலாக இருக்கும்
---------------------------------------------------------------------
காட்சியில் காத்தாடி ராமமூர்த்தியின் மளிகை பாக்கியை வசூல்
செய்து கொண்டு போவதற்காக மளிகைக் கடைக்காரர் வீடு தேடி வந்திருப்பார்.
அவர் வந்திருக்கும் செய்தியைக் குளித்துக் கொண்டிருக்கும் தன்
கணவரிடம் சொல்வதற்காக நடிகை குட்டி பத்மினி குளியலறைக் கதவின்
மறுபுறம் நின்று பேச்சுக் கொடுப்பார்:

“ஏன்னா, செட்டியார் வந்திருக்கார். சீக்கிரமா வாங்கோ?”

“எந்தச் செட்டியாருடீ?”

மனைவி கோபமாக: ”ம்ம்ம்..ராஜா சர் முத்தையா செட்டியார்!”

“நான் ஒன்னும் அவரிடம் கடன் ஏதும் வாங்கவில்லையேடி?”

“அதுதான் கொடுத்துவிட்டுப் போகலாம்னு வந்திருக்கார்!”

“விளையாடாம, விஷயத்தை ஒழுங்கச் சொல்லுடீ!”

இதற்குள், என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக நைசாக
உள்ளே வந்த மளிகைக் கடைக்காரர், சத்தமின்றி நடந்துவந்து
குட்டி பத்மினியின் பின்புறம் நின்றிருப்பார். அதைக் கவனிக்காமல்
தம்பதிகளின் உரையாடல் தொடரும்.

“மளிகைக்கடைச் செட்டியார்தான் வந்திருக்கார்!”

“ஓ..அந்த லூசு வந்திருக்கா? எங்க ஆத்துக்காரர் குளிக்கிறார்.
வர்றதுக்கு ஒருமணி நேரம் ஆகும்னு சொல்லி அனுப்பிச்சுவைடி
அவரை!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பெரியண்ணனின் செக் லிஸ்ட்
(சீரியஸாகி விட வேண்டாம். சும்மா நகைச்சுவைக்காக)

படையெடுப்பிற்கான செக் லிஸ்ட்.
எல்லாம் ரெடி. ஒன்றைத் தவிர.
படத்தைப் பாருங்கள். அது தெரியவரும்!


==============================================================
கணினி கந்தசாமிக்கு உதவுங்கள் ப்ளீஸ்!

மவுஸைக் கையில் பிடித்துக் கொண்டு
நகர்த்த முயற்சிக்கிறார், வேறொன்றுமில்லை!
===============================================================
ராதா’ன்னா, ராதாதான்!

”அவனவன் நீராவியிலே கப்பல் விடுறான், ரயில் விடுறான், நீங்க இட்லி,
குழா(ய்)ப்புட்டு விடுறீங்களா? நல்லா விடுங்கடா!” நடிகவேள் எம்.ஆர்.ராதாவின்
மறக்கமுடியாத வசனம் நினைவில் இருக்கிறதா? படத்தின் பெயரைச் சொல்லுங்கள்
பார்க்கலாம். 48 வருடங்களுக்கு முன்பு வந்த படம். க்ளூ வேண்டுமா?
கதாநாயகி தாழம்பூவைத் தலையிற்சூடி, வாழையிலை போலவந்தவர்!

===================================================================
யார் இந்த தேவதை?

தமிழ்நாட்டின் (அந்நாள்) பிரபலம் இவர்.
திரைப்படத்துறையைச் சேர்ந்தவரல்ல.

யார் இவரென்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம்!

அக்கா, உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்
!

================================================================
கனவுக் கன்னி?
இல்லாமலா - ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V



வழக்கம்போல மூத்த குடிமக்களுக்காக!
நடிகை. ஈ.வி.சரோஜா
இளவட்டங்களுக்கான படம் அடுத்து உள்ளது!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

இவர் யாரென்று தெரிகிறதா?
இவருடைய பெயரின் முன்பாதி வெஸ்ட் இண்டீஸ் கிரிகெட் ஆட்டக்காரர் பெயரின் பின்பாதி!
V
V
V
V
V
V


ஊனா தானா கணக்கில் ஜிலேபி நம்பர் 4
V
V
V
V
V
V


எப்.எம் ரேடியோ அக்காவிற்காக இந்த வாரமும் தொடர்ந்து மேடி!

V
V
V
V
V
V
V
V
V
அடுத்து ஒரு சூப்பர் படம் அது வடகரை அண்ணாச்சிக்காக!
V
V
V
V
V
V
V
V
V
V
=========================================================
வாழ்க வளமுடன்!

Monday, August 03, 2009

லட்டு-ஜிலேபி-ஜாமூன்-பாஸந்தி-பாதாம்அல்வா-ரசமலாய்!

காலையில் ஏற்றிய பதிவு இரண்டு மணி நேரமாகியும் கண்ணில் படவில்லை.
அதன் சுட்டி இங்கே உள்ளது. அதைக் கிளிக்’ கி அனைவரையும் படிக்க வேண்டுகிறேன்
அதன் சுட்டி (Link )
அன்புடன்
SP.VR.சுப்பையா
----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

Saturday, August 01, 2009

லட்டு-ஜிலேபி-ஜாமூன்-பாஸந்தி-பாதாம்அல்வா-ரசமலாய்!


லட்டு-ஜிலேபி-ஜாமூன்-பாஸந்தி-பாதாம்அல்வா-ரசமலாய்!

ஐந்தாம்படை திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதினார். வலையேற்றினார்.
அதற்குப் பிறகு, கடந்த பத்து நாட்களாகத் தவப்புதல்வர் உண்மைத் தமிழரைக்
காணவில்லை! கண்டு பிடித்துச் சொல்பவர்களுக்கு, இரண்டு ஜிலேபி சன்மானம்!

Over to Post
============================================================================
கண்ணதாசனும், காப்பிக்கு உப்பிட்ட காரிகையும்!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தென்றல் என்ற இலக்கியப் பத்திரிக்கையை நடத்திக்
கொண்டிருந்த போது, துணை ஆசிரியர் ஒருவர் இரண்டு சினிமா ஸ்டில்ஸ்களை காண்பித்து,
சினிமா பகுதியில் பிரசுரிக்க வந்துள்ளது என்றார்.

படத்தை வாங்கிப் பார்த்தார் கவியரசர்.

ஒரு படம் நடிகை ராஜசுலோசனா, கதாநாயகனுக்குக் காப்பிக் கோப்பையைக் கொடுப்பது
போல இருந்தது. அந்த சமயம் ராஜசுலோச்சனா அவர்கள் திரைக்கு வந்த புதிது. மிகவும்
அழகான தோற்றத்துடன் இருப்பார்.

படத்தைப் பார்த்த கவியரசர் ஒரே நிமிடத்திற்குள், படத்தின் பின்புறம் இரண்டு வரிகளை
எழுதியதோடு, அந்த உதவி ஆசிரியரிடம் அதைக் கொடுத்து விட்டுச் சொன்னார். "புகைப்
படத்திற்குக் கீழே இந்த இரண்டு வரிகள் வரவேண்டும் - படத்துடன் சேர்த்துப் போட்டு
விடுங்கள்"

அந்த இரண்டு வரிகள் என்ன தெரியுமா?

"காப்பிக்கு உப்பிட்டுக் காரிகைதான் தந்தாலும்
சாப்பிட்ட பின்தான் சர்க்கரையின் நினைவு வரும்!"


காப்பிக்கு அந்தப் பெண் தவறுதலாக உப்புப் போட்டுக் கொடுத்தால் கூட, கொடுத்த
அந்த சிவந்த கரங்களையும், மலர்ந்த அவளுடைய முகத்தையும், பார்த்துக்கொண்டே
வாங்கியவன் அந்தக் காப்பியைக் குடித்து விடுவானேயன்றி சர்க்கரையின் ஞாபகம்
அப்போது அவனுக்கு எப்படி வரும்? வந்தாலும் குடித்து முடித்தபின்தானே வரும்
என்று பொருள் படும்படி எழுதியிருந்தார் கவியரசர்.

என்ன அசத்தலான வரிகள் பாருங்கள்!

இரண்டவது படம் நடிகை பத்மினியின் படம். அவர் கார் ஒன்றில் ஸ்டீரிங்கைப் பிடித்தபடி
முன் சீட்டில் அமர்ந்திருப்பது போன்ற படம். அதற்கும் கவியரசர் இரண்டு வரிகள் எழுதிக்
கொடுத்தார்.

அந்த வரிகள் இதுதான்!

"வண்ண மயில் காரோட்ட வருகின்றார் என்றால்
எண்ணை யில்லாமல் ஓடாதா இந்தக்கார்?"


கவிதை அவர் வாழ்க்கையோடு அப்படிப் பின்னிப் பிணைந்திருந்தது.
=====================================================
வாலில்லாத வாலி!

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திருவாளர் ரங்கராஜன் எப்படிக் கவிஞர் வாலியானார்?

அது ஒரு சுவையான கதை. வாலிக்கு எப்படி தமிழின் மேல் ஒரு தீராத பற்று இருந்ததோ
அதேபோல ஒவியத்தின் மீதும் ஒரு கண் இருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமை
இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த
திரு.மாலி அவர்களைப் போலவே தானும் தமிழ்கூறும் நல்லுலகத்தை ஒரு கலக்குக்
கலக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவரிடம் அவருடைய பள்ளித்தோழன் பாபுதான்
‘மாலி'யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும்
பெயரைச் சூட்டினான். பள்ளிக்கூட வட்டாரத்தில் வாலி என்னும் பெயர் பரவிப் பலரையும்
சுழற்றி அடித்தது. அதாவது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது

ஒருமுறை வாலியென்ற கையொப்பமுடன் வாலி வரைந்த பாரதியின் படத்தை வாங்கிப் பார்த்த
தமிழ் வாத்தியார், படத்தைப் பாராட்டியதோடு, நக்கலாக வேறொன்றையும் சொன்னார்.

“உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலின்னு பேர் வெச்சுக்கிட்டே?”

அதைக் கேட்டு சுற்றி நின்ற மாணவர்கள் சிரிக்க, வாலி ஒரு துண்டுச் சீட்டில் இப்படிப் பதில்
எழுதிக் கொடுத்தார்.

“வாலில்லை என்பதனால் வாலியாகக் கூடாதா?
காலில்லை என்பதனால்
கடிகாரம் ஓடாதா?”

என்னவொரு நெத்தியடியான பதில் பாருங்கள்!
==========================================================
அம்மாவின் இடுப்பில் சவாரி!

அந்தக் காலத்தில், தாய்மார்கள் குழந்தைகளை இடுப்பில் அமர்த்திக் கொண்டு
உலா வருவர்கள். சில குழந்தைகள் ஐந்து வயதுவரை, எங்கே சென்றாலும், அம்மாவின்
இடுப்பைவிட்டுக் கீழே இறங்காது. இன்றைய நிலைமை என்ன? படத்தைப் பாருங்கள்.

இடுப்பில் இருக்கவேண்டிய குழந்தை இழுவைவண்டியில் கிடக்கும் அவலம்!

இடுப்பில் இருக்கவேண்டிய குழந்தை,
இழுவைவண்டியில் கிடக்கும் அவலம்!

==========================================================
திரைச் செய்தி (படத்துடன்)


கொஞ்சம் பழசானாலும் சுவையானது! சும்மா 60 ஆண்டுகள் மட்டுமே பழைமையானது!

புதுச் செய்திகளுக்கு கோவையில் வழி ஏது சாமிகளா?

அந்தக் காலத்தில், திரையுலகில் பிரம்மாண்டம் என்றால் இருவர்தான்.
ஏ.வி.எம் செட்டியார் மற்றும் எஸ்.எஸ்.வாசன் ஆகிய இருவரும் செய்யாத
சாதனைகள் எதுவும் இல்லை.

1948ஆம் ஆண்டில் தனது ஸ்டுடியோவில் ’சந்திரலேகா’ திரைப்படத்தைப்
பிரம்மாண்டமாகத் தயாரித்து மக்களைப் பரவசப் படுத்தினார் வாசன். அன்றைய
நிலையில் யாரும் நினைக்க முடியாத அளவில் 30 லட்சம் ருபாய் செலவில் படம்
எடுக்கப்பெற்றது.

அதோடு முதல் முறையாக, இந்தியா முழுவதும் அப்படம் திரையிடப் பெற்றது.
படம் அதிரடியாக மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இயக்கம்: எஸ்.எஸ்.வாசன்,
பாடல்கள்: பாபநாசம் சிவன் மற்றும் கொத்தமங்கலம் சுப்பு.
இசை: சலூரி ராஜேஷ்வர ராவ் (மிஸ்ஸியம்மா படத்தில் வரும், மிகப்பிரபலமான, ’பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ’ பாடலின் இசையமைப்பாளர்)

நாயகி: டி.ஆர்.ராஜகுமாரி, நாயகர்கள்: எம்.கே ராதா. ரஞ்சன்
நகைச்சுவை: என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம்

படத்தில் வரும் ஆடற்காட்சிகளும், பாடற்காட்சிகளும் மிகவும் அருமையாக இருக்கும்.
மக்கள் அவறிற்காகவே மீண்டும் மீண்டும் அப்படத்தைப் பார்த்தார்கள்.

படம், ஆங்கில sub-title களுடன், வெளிநாடுகளிலும் திரையிடப்பெற்று, பணத்தை
அள்ளிக்கொண்டு வந்தது

---------------------------------------------------------------------------------


4 in one!

மார்வாரி இளைஞன் ஒருவன் கடும் அவஸ்தையில் இருந்தான்.

சொந்தவீடு இல்லை. கையில் காசு இல்லை.கடன் இருந்தது.
வீட்டில் அழகான மனைவி இருந்தாள். விளையாடக் குழந்தை இல்லை.
அதோடு பார்வையற்ற தன்னுடைய அன்னையையும் வைத்துக் காப்பாற்ற
வேண்டிய சூழ்நிலை!

மனம் உருகிக் பிரார்த்தித்தான்.

கடவுள் அவனுக்கு முன்வந்து காட்சி கொடுத்துச் சொன்னார்.

“உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். ஒரே ஒரு வரம்! என்ன வேண்டும் ?
கேள்! தருகிறேன்!

ஒரு நிமிடம் யோசித்துவிட்டு அவன் சொன்னான்.

”என்னுடைய மாடமாளிகையில், என் செல்ல மகனுக்கு, என் மனைவி தங்கக்கிண்ணத்தில்
உணவு ஊட்டும் காட்சியை, என் அன்னை பார்த்து மகிழ வேண்டும்!”

That is 4 in one!

கடவுள் அலுத்துக் கொண்டார்:

“மார்வாரிகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!”

===========================================================================
கவுண்டர் vs செந்தில்



”டேய் மண்டையா?”

”என்ன அண்ணே?”

”மலை உச்சிலேருந்து குதிச்சு, அப்படியே வானத்தில பறந்து வந்து தரையில லாண்டிங்
ஆனோம்னு வச்சிக்க, எப்படீடா இருக்கும்?”

”அஜால், குஜாலா இருக்குமண்ணே!”

”நீ சொல்லுவேன்னு தெரியும்டா! அதனாலதான் உனக்கும் சேர்த்து மிலிட்டரி கேன்டீன்ல
இருந்து ஒன்னுக்கு இரண்டா வாங்கியாந்திருக்கேன்டா. இங்க பாருடா பனங்கொட்டைத்
தலையா!”

”அய்ய்ய்ய்ய்.... பாராசூட்.. ரெம்ப டேங்ஸ்... கொடுங்கண்ணே!”

’’உன் நாக்கில தர்ப்பையை வச்சுத் தேய்க்கணும்டா. டேங்ஸ் இல்லேடா. தாங்ஸ்’ன்னு சொல்லோணும்டா! நீ சும்மா லவட்டிக்கிட்டுப் போகலாம்னு பாக்காதே! இது வெலை
என்னான்னு தெரியுமாடா? ஐயாயிரம் ரூபாய். ஃபைவ் தவ்ஸன்டா! பணத்தைக் கீழ வச்சிட்டு, அப்பால இதை எடுத்துக்கிட்டுப்போடா!”

“பணம் கெடக்குது அண்ணே! இது எப்படி வேலை செய்யும்னு சொல்லுங்க!”

“அப்படிக்கேளுடா, என் அறிவுக் கொழுந்தே! மலை உச்சிலேயிருந்து குதிச்சவுடனே, தாமசிக்காமல், இந்த பட்டனை அமுக்கோணும்டா. அமுக்கினா, பாராசூட் விரிஞ்சுக்கும்டா.நீ லாலான்னு பாடிக்கிட்டே பறந்து கீழே வந்திரலாம்டா?”

“ஒரு வேளை பட்டன் வேலை செய்யலைன்னா?”

“இந்த லொல்ளுதானே வேணாம்கிறது. அப்படி வேலை செய்யலைன்னு வச்சிக்க.
கீழே வந்தவுடனே என்னிய வந்து பாருடா. உன் பணத்தைத் திருப்பி வாங்கிக்கடா!”

=============================================================

சென்ற வாரம் படித்ததில் பிடித்த இடுகை! நீங்களும் படித்துப் பாருங்கள்
சுட்டி இங்கே!

=============================================================

கனவுக் கன்னிகள்?
அது இல்லாமலா? கீழே உள்ளது பார்த்துவிட்டுப் போங்கள்!
V
V
V
V
V
V
V
V


கோபம் வேண்டாம். இது மூத்த குடிமகன்களுக்காக!

உங்களுக்கானது அடுத்து உள்ளது!

V
V
V
V
V
V
V
V


பெயர் பிஸின்...சாரி அஸின்!

உண்மைத்தமிழருடன் தொடரும் ஜிலேபி கணக்கிற்காக அடுத்த படம்


V
V
V
V
V
V
V
V



ஜிலேபி ந்மபர் 3

ஆணாதிக்கம் கிஞ்சித்தும் இல்லை என்று சொல்ல,
குத்துவிளக்குகளுக்காக ஒரு படம் கீழே உள்ளது.
அதையும் பார்த்துவிட்டுப்போங்கள்

V
V
V
V
V
V
V
V



இந்தவார ரசமலாய் விருது வாங்கியவர் யார் தெரியுமா?
பதிவின் மேல் பகுதியில் பாருங்கள்.
அவருக்கு ஒரு ஹலோ சொல்லி விட்டுப்போங்கள்!

=====================================================
வாழ்க வளமுடன்!

Monday, July 27, 2009

லட்டு-ஜிலேபி-ஜாமூன்-பாஸந்தி-பாதாம்அல்வா-ரசமலாய்!



லட்டு-ஜிலேபி-ஜாமூன்-பாஸந்தி-பாதாம்அல்வா-ரசமலாய்!


நமது இனிய நண்பர், திண்டுக்கல்லின் ”ஒரே” தவப் புதல்வர், உண்மைத் தமிழர், வாரம் இரண்டு தடவை இட்லி-தோசை-வடை-பொங்கல்-சட்னி-சாம்பார் என்று பதிவுகள் போட்டுக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அவைகள் அனைத்தும் எனக்குப் பிடித்த அயிட்டங்கள்தான்!
இருந்தாலும் அதே பெயரில் கடை திறக்கக் கூடாது என்று எனது கடைக்குப் புதுப் பெயர் வைத்துள்ளேன். சென்ற வாரம் வந்து ருசித்தவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னதால் இந்தவாரமும் இனிப்புக்கள் பறிமாறப்படுகின்றன.

ஷைலஜா அக்காவிற்காக (எனக்குத் தங்கை, உங்களுக்கு அக்கா தானே?) புதிதாக மைசூர்ப்பா’வும்,
மருதமலையானை வளைத்துப் பிடித்து வைத்திருக்கும், எங்கள் கோவைச் செல்வர் வடகரை வேலன் அவர்களுக்காக காராச்சேவும் சேர்க்கப்பட்டுள்ளது!

சுவைத்து மகிழ்க!

Over to the post
**************************************

கல்லூரி இட்லி!யும், கவியரசர் கண்ணதாசனும்!

கவியரசர் கண்ணதாசன் ஒருமுறை லயோலா கல்லூரியின் தமிழ் மன்றத்தில் உரையாற்றச் சென்றிருந்தார். விழா துவங்குமுன்பாக, மாணவர்கள், கவியரசருக்கு தங்கள் கல்லூரி உணவு விடுதியில் சிறுண்டி வழங்கினார்கள்.

சூடாக இருந்த இட்லியைக் கவியரசர் விரும்பிச் சுவைத்தார்.

மாணவர்களில் ஒருவர்,”ஐயா நீங்கள் எதைப் பற்றியும் கவிதை எழுதுவீர்கள் இல்லையா?”
என்று கேட்கவும், கவியரசர், “ஆமாம்’” என்று பதில் சொன்னார்.

உட்னே, அந்த மாணவர், ”எங்கள் விடுதி இட்லியைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்லுங்கள் ஐயா!” என்றார்.

சட்டென்று அடுத்த நொடியே கவியரசர் இப்படிச் சொன்னார்:

“இட்டிலியே ஏன் இளைத்துவிட்டாய்? - எவனை
இங்கே நீ காதலித்தாய்?”

அதுதான் கவியரசர்!
==========================================================
சொந்தக் கதை; சுவாரசியமான கதை!

நான் பதிவுகளை எழுதத் துவங்கியது 25.12.2005ல் முதல் 4 மாதங்களில் எழுதியது மொத்தம் 26 பதிவுகள்.நடுவில் புத்தக வெளியீட்டுயிட்டு வேலை ஒன்றால் 4 மாதங்கள் பதிவுகளை எழுத நேரம் இல்லாமல் போய்விட்டது. மாய்ந்து மாய்ந்து எழுதிய அனைத்தையும் யாரும் படிக்கவில்லை. அன்பர் ஞானவெட்டியான் ஒருவர்தான் அவ்வப்போது வந்து படிப்பார். இங்கே நமது ஆட்டம் எடுபடாது. ஒதுங்கி விடுவோம் என்று இருந்தேன்.

நாம் நினைத்தாலும் விதி விடுமா? கழுத்தைப் பிடித்து மீண்டும் தமிழ்மணத்திற்குள் தள்ளியது.

எனக்கு நானே அறிவுரை சொல்லிக்கொண்டு ஒரு இடுகையை வலை ஏற்றினேன். எதிர்பாராத விதமாக அது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. அத்ற்குப் பிறகு என் எழுத்துக்களைப் படிக்கச் சிலர் கிடைத்தார்கள்.

பல புதுமுகங்கள் இன்று உள்ளார்கள். அவர்களுக்கு அதை இன்று அறியத்தருகிறேன்
................
தலைப்பை நன்றாகப் போடு, தானாக வருவார்கள்

எதை நீ படித்தாய்
அவர்கள் படிப்பதற்கு?

எதற்கு நீ மறுமொழிந்தாய்
அவர்கள் உனக்கு மறுமொழிவதற்கு?

எதற்கு நீ ஒழுங்காகப் பின்னூட்டம் இட்டாய்
அவர்கள் உனக்கு பின்னூட்டம் இடுவதற்கு

எத்தனைபேர் பதிவுகளைக் காணவேண்டி ஆசைப்பட்டாயோ
அத்தனை சீக்கிரம் உன் பதிவுகள் பரணுக்குப் போவிடும்

உன்னுடைய எந்தப் பதிவு முதல் பக்கத்தில் இருக்கிறதோ
அது சில மணி நேரத்தில் அடுத்த பக்கத்திற்குபோய்விடும்
அதற்கு அடுத்த நாள் பரணுக்குள் போய் விடும்
பிறகு பூமிக்குள் புதையுண்டு போய்விடும்

பதிவை மட்டும் இடு
படிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்காதே

நாளென்றுக்கு நூறு பதிவுகள் என்றால்
நானே அவதரித்தாலும் படிக்க முடியமா?

தலைப்பை மட்டும் நன்றாகப் போடு
தானாக வருவார்கள்

பதிவை மட்டும் இடு
படிக்கப்படுமென்று எதிர்பார்க்காதே!

இதுவே வலைப்பூக்களின் (Blogs) நியதியும்
வலைஞர்களின் குணாம்சமும் ஆகும்!

சம்பவாமி யுகே யுகே!
-----------------------------------------------------------------------
படத்துடன் செய்தி!
V
V
V
V
V
V
V




நன்றி: தினமலர்
இதுவும் சுவாரசியமான செய்திதான்!
அழகு கொஞ்சும் அலங்காரத்துடன்
அம்மனின் அழகையும்
, கம்பீரத்தையும் பாருங்கள்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரைச் செய்தி, அடுத்த வாரம்.
அதற்குப் பதிலாக கலக்கல் படம் ஒன்று, அடிக்குறிப்புடன்!



வேறு ஒன்றுமில்லை, அண்ணாச்சி உடற்பயிற்சி செய்கிறார்!
=====================================================
நகைச்சுவை
முடிந்தால் சிரித்து வையுங்கள்!
1
காலையில் எழுந்தவுடன் பெட் காஃபிகூடக் குடிக்காமல், தன் கணவன், கண்களை மூடிக்கொண்டு, சிரத்தையாக இறைவழிபாட்டில் இருப்பதைத் தொடர்ந்து பார்த்த மனைவி, ஒரு நாள் கேட்டாள்:

”அதென்ன புதுப்பழக்கம்? காலையில் கடவுள் வணக்கம்?”

“இல்லை, உன்னைப் போன்ற மனைவி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என்றான் கணவன்.

காரணம் புரியாத மனைவி, உடனே கேட்டாள்:” எதற்காக?”

“நான் ஒருவன் மட்டும் கஷ்டப்படுவது எந்த விதத்தில் நியாயம்?”
.................................
2
மனைவி: நீங்கள் எனக்குப் பட்டுப் புடவையும், நகையும் வாங்கித் தருவதாக நேற்று இரவு கனவு கண்டேன்.
கணவன்: ஆமாம், நானும் கனவு கண்டேன். கடை பில் தொகைகளுக்கு உன் அப்பா வந்து பணம் கட்டிவிட்டுப் போனார்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பதற்றத்தைக் குறைக்க ஒரு யோசனை!
just 3 steps to end your tensions.... ....

ctrl +alt + del

"CONTROl" yourself, look for "ALTERNATE" solution
&
"DELETE" the situation that caused the tension..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து மைசூர்பா. ஷைலைஜா அக்காவிற்காக!
(மீண்டும் சொல்கிறேன் அவர் எனக்குத் தங்கை, உங்களுக்கு அக்கா தானே?)

ஆனைக்கா அகிலாவும் திருவரங்கம் வாலியும்!
பேசும் படம் பிறந்த 1931ஆம் ஆண்டில்தான் கவிஞர் வாலியும் பிறந்தார். இயற்பெயர் திரு.ரங்கராஜன்.

பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருவரங்க மண்ணில்தான். சிறு வயதில் குடித்ததெல்லாம் காவிரி ஆற்றுத் தண்ணீர்! படித்ததெல்லாம் பாசுரங்கள்! திருவரங்கத்தில் பிறந்திருந்தாலும் கொண்ட காதலெல்லாம் அருகில் இருந்த ஆனைக்காமேல்தான். ஆமாம் திருவானைக்கோவில் மீதுதான்.

காளமேகத்துக்குப் பிறகு ஆனைக்கா அகிலாண்டேஷ்வரியின் பார்வை இவரின் மேல் விழுந்தது. தினமும் சுற்றி வருகிறானே பையன் என்று தமிழை வசப்படுத்திக் கொடுத்தாள்.

அதை வாலி அவர்களும் மறக்காமல் மனதில் வைத்திருந்து, பின்னொரு நாளில் பாட்டரங்கம் ஒன்றில் கவிதை வரிகளால் அகிலாண்டேஷ்வரிக்குத் தன் நன்றியைச் சமர்ப்பித்தார்.

“ஆனைக்கா அம்பிகையின்
அடியொற்றிப் பாட்டிசைத்தால்

மோனைக்கா பஞ்சமுண்டு?
முற்றெதுகை முதலான

சேனைக்கா பஞ்சமுண்டு?
சூழ்கொண்ட செந்தமிழின்

சோனைக்கா பஞ்சமுண்டு?
சுடர்கவிதை துளிர்க்காதோ?”


எப்படியிருக்கிறது அக்காவ்....?
=====================================================================================
இது காராசேவு. நண்பர் வடகரை வேலவருக்காக!

கோதுமை - விளைபொருள் - அதற்கு வரி கிடையாது. அதையே மாவாகத் திரித்து விற்றால் வரியுண்டு! அந்த மாவைச் சப்பாத்தியாகச் செய்து விற்றால் வரி கிடையாது! ஆனால், அதே மாவில் Biscuit, Bread போன்ற Baked அயிட்டங்களைச் செய்து விற்றால் வரியுண்டு!

அதுதான் இந்தியா!
..............................................
உங்களைப் பிழிந்து எடுக்கும் மற்ற வரி விவரங்கள்:

Tax Structure in India.... Funny But True!
1
Business : PROFESSIONAL TAX!
2
Selling the Goods : SALES TAX!!
3
Getting Goods from other State/Abroad :
CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTROI!
4
While selling Goods, if you get profit: INCOME TAX!
5
Distributing profit by the way of dividend: DIVIDEND DISTRIBUTION TAX
6
Manufacturing the Goods in a factory: EXCISE DUTY!
7
If one has Office / Warehouse / Factory: MUNICIPAL & FIRE TAX!
8
If one has staff: STAFF PROFESSIONAL TAX!
9
For business in Millions: TURNOVER TAX!
10
If one is taking out over 25,000 Cash from Bank: CASH HANDLING TAX!
11
For Lunch & Dinner at Hotel : PAY FOOD & ENTERTAINMENT TAX!
12
If one has taken or given any Service / (s): SERVICE TAX!
13
Big Amount by gift on birthday: PAY GIFT TAX!
14
Wealth: WEALTH TAX!
15
To reduce Tension, for entertainment, if one goes to Cinema or Resort: ENTERTAINMENT TAX!
16
If one has purchased a House: STAMP DUTY & REGISTRATION FEE !
17
Additional Taxes: EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.'s TAX !!!
18
Delayed any time for Paying any tax: INTEREST & PENALTY
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
கனவுக் கன்னி படம்?

அது இல்லாமலா?
வழக்கம்போல கீழே உள்ளது!

V
V
V
V
V
V

நடிகை S.D. சுப்புலெட்சுமி அவர்கள்
முகத்தைச் சுழிக்காதீர்கள். மூத்த குடிமகன்களுக்காக இதைப் போட்டுள்ளேன்.
1938ஆம் எடுத்த படம் என்று பட்சி சொல்கிறது.
இளவட்டங்களுக்கான படம் அடுத்து உள்ளது!
V
V
V
V
V
V

நடிகை அனுஷ்கா சர்மா!
அடுத்து உள்ள படம் உண்மைத்தமிழருக்காகப் பதிவிடப்பட்டுள்ளது.
அதையும் பார்த்து விட்டுப்போங்கள்.
V
V
V
V
V
V



பதிவிற்குப் பதிவு ஐஸின் படத்தைப் போட்டால் ஒரு ஜிலேபி என்று ஒப்பந்தம்.
கணக்கில் பற்று எழுதப்படுகிறது.
சென்னை வரும்போது, உண்மைத் தமிழரிடம் வசூல் பண்ணிக் கொள்ள வேண்டும்! நான் வரும்போது, அவர் தெலுங்குப் பட டிஸ்கஷனில் பிஸியாக இருக்கிறேன் என்று டிமிக்கி கொடுக்காமல் இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஒரே கவலை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

Monday, July 20, 2009

லட்டு-ஜிலேபி-ஜாமூன்-பாஸந்தி-பாதாம்அல்வா-ரசமலாய்!


லட்டு-ஜிலேபி-ஜாமூன்-பாஸந்தி-பாதாம்அல்வா-ரசமலாய்!

நமது இனிய நண்பர், திண்டுக்கல்லின் தவப் புதல்வர், உண்மைத் தமிழர், வாரம் இரண்டு தடவை இட்லி-தோசை-வடை-பொங்கல்-சட்னி-சாம்பார் என்று பதிவுகள் போட்டுக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சிங்காரச் சென்னையில் இருப்பதால் அவருக்கு, சுடச்சுட பல கலக்கல் செய்திகள் கிடைக்கின்றன. கிடைக்கின்றன என்பதைவிட, அவருடைய பவர்ஃபுல் கண்களில் படுகின்றன.

சினிமாபிட்டுகளுக்கு கோடம்பாக்கம், பலவகைச் செய்திகளுக்குப் பனகல் பார்க், காதல் கலாட்டாக்களுக்குத் தீம் பார்க்குகள், மற்றவைக்கு நடேசன் பார்க்..மன்னிக்கவும் மெரினா என்று ஏராளமான இடங்கள் சென்னையில் இருக்கின்றன.

அதோடு சில சென்னைப் பதிவர்கள் துணைக்கு அல்லது பாதுகாப்பிற்கு அவரைப் பார்களுக்குக் கூட்டிச் சென்று கூல் டிரிங்க் மட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு, சுண்ணாம்பு தடவி அனுப்பி வைக்கிறார்கள். அங்கே கிடைக்கும் செய்திகளை, தடவிய சுண்ணாம்பு முழுதாகக் காயும் முன்பாகவே பதிவில் ஏற்றி விடுகிறார்.

இப்படியே அவர் பெருமையை பன்னிரெண்டாயிரம் பத்திகளுக்குச் சொல்லலாம். உதாரணத்திற்காகவும், உங்கள் பொறுமை கருதியும் சிலவற்றை மட்டும் சொன்னேன். அதனால்தான் அவரால் செய்திகளை வீடுகட்டி அடிக்க முடிகிறது. குழப்பமில்லாமல் அனைவரையும் கும்ம முடிகிறது!

கோவையில் அதற்கெல்லாம் வாய்ப்புக் கிடையாது.

சிறுவாணித் தண்ணீரையும், ஜில்லென்ற காற்றையும் விட்டால் இங்கே வேறு ஒன்றுக்கும் வழியில்லை.

இங்கே உள்ள மகாஜனங்கள் வாரம் ஆறு நாள் தொழிலில் அல்லது தொழிற்சாலையில் முடங்கி விடுவார்கள். மீதி ஒரு நாள் கட்டிங், கறிக்கோழி என்று ஒதுங்கி விடுவார்கள். அடுத்த வீட்டில் குடியிருப்பவனின் பெயர்கூடத் தெரியாத அல்லது தெரிந்து கொள்ள நேரமில்லாத அப்பாவி ஜனங்கள்

ஆகவே சுவையாக, சுவாரசியமாக எதையாவது சொல்ல வேண்டுமென்றால் அல்லது எழுத வேண்டுமென்றால் வீட்டில் படித்த, வெளி ஊர்களில் கேட்ட, பார்த்தவற்றைத்தான் சொல்ல முடியும்.

அதைச் சொல்லும் முகமாகத்தான் இந்தத் தொடர் பதிவு. வாரம் ஒரு நாள். அதுவும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 7:15 மணிக்கு!

வலை உலகில் ஏற்கனவே நிறைய இட்லிகள், இட்டலிகள் உள்ளன.

ஆகவே தொடரின் தலைப்பை இப்படிப்போட்டுள்ளேன். (with copy right)
லட்டு-ஜிலேபி-ஜாமூன்-பாஸந்தி-பாதாம்அல்வா-ரசமலாய்!

Over to the post
***************************************************************

அரங்கத்தில் அசத்தலாக நடந்தது

ஒரு பட்டிமன்ற மேடை. நாற்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு அணியின் தலைவர். எதிர் அணியில் அவருடைய சீடர் மக்கள் கவிஞர் அரு.நாகப்பன் அவர்கள். அவர் கவியரசரை விட வயதில் இளையவர்.

பட்டிமன்றத்தலைவர். திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள். தலைப்பு: குடும்பக்கட்டுப்பாடு
(தலைப்பை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)

முதலில் பேசிய திரு.அரு.நாகப்பன் சபைத் தலைவருக்குக் கலக்கலாக இப்படி ஒரு வேண்டுகோளை வைத்தார்:

“கவியரசர் கண்ணதாசன் இந்த மேடைக்குச் சம்பந்தமில்லாதவர். அவருக்குப் பதினான்கு குழந்தைகள். ஆகவே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதியில்லை.
முதலில் மேடையை விட்டு அவரைக் கீழே இறக்குங்கள்!”

சபை சிரிப்பொலியால் அதிர்ந்தது.

தன்முறை வந்தவுடன் பேச வந்த கவியரசர், “எனக்குப் பதினான்கு குழந்தைகள் என்பது
உண்மை. குடும்பக்கட்டுப்பாட்டின் அருமை எனக்குத்தான் நன்றாகத் தெரியும். நாகப்பனுக்கு இரண்டே இரண்டு குழந்தைகள்.அவனுக்கு என்ன தெரியும்? ஆகவே அவனுக்குத்தான் தகுதியில்லை. அவனை முதலில் கீழே இறக்குங்கள்” என்று ஒரு போடு போட்டாரே
பார்க்க வேண்டும்.

சபையில் ஆரவாரம் அடங்க ஐந்து நிமிடங்கள் ஆயிற்று!

கவியரசரின் சமயோசித புத்திக்கு இது ஒரு உதாரணம்!
================================================================
பெரிய திரைச் செய்தி (Cinema News)

சூப்பர் ஸ்டாரின் படங்கள்தான் அதிகப் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படுகின்றன. அதிக அளவில் விளம்பரப்படுத்தப் படுகின்றன.

இந்த வேலையை அந்தக் காலத்தில் The Great திரு.S.S. வாசன் அவர்கள் தான் தயாரித்த படங்களுக்குச் செய்தார். 'சந்திரலேகாவை’யும் 'ஒளவையாரை'யும் மறக்க முடியுமா? அவருக்குச் சொந்தமாக ஜெமினி ஸ்டுடியோவும் ‘ஆனந்த விகடன்’ வார இதழும் இருந்ததால் அவரால்
நினைத்ததைச் சாதிக்க முடிந்தது.

ஒளவையார் படத்திற்கு, திருமதி.கே.பி.சுந்தராம்பாள் அவர்களை, யாரும் நினைத்துப் பார்க்காத தொகையைக் கொடுத்து, சம்மதிக்க வைத்துப் படத்தில் நடிக்க வைத்ததோடு, புதுமையான முறையில் விளம்பரங்களைச் செய்து, அந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக ஆக்கிய பெருமை அவரையே சேரும்!.

இப்போது தொழில் நுட்பம் தெருவிற்கு வந்து விட்டது. அது இல்லாத காலத்திலேயே அவர் ’Multi Colour’ நோட்டீஸ் அடித்து வீடு வீடாகக் கொடுத்து, அத்தனை மக்களையும் பார்க்க வைத்தார் என்றால் அது இமாலய சாதனை அல்லவா?

திருநெல்வேலி பேலஸ்-டி-வேல்ஸ் திரையரங்கில் அந்தப் படம் வெளிவந்து ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் அவர் வினியோகித்த நோட்டீஸ் ஒன்றை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.
ஐம்பதெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த நோட்டீஸ் சாமிகளா!
அதை மனதில் வையுங்கள்.

அப்போது என் தந்தையார் திருநெல்வேலியில் இருந்தார். அவருடைய பொக்கிஷங்களை குடைந்தபோது, சுவாரசியமாக இருந்தவற்றையெல்லாம் எடுத்து வைத்துள்ளேன்.
அதிலிருந்துதான் இதை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கிப் பாருஙக்ள். படம் பெரிதாகத் தெரியும்!



=====================================================


எம்மதமும் சம்மதம் (படத்துடன் செய்தி)
சென்னை ராயப்பேட்டையில் நடந்த மாறுவேடப் பொட்டி ஒன்றில் முஸ்லிம் சகோதரி ஒருவர் தங்கள் வீட்டுச் சிறுவனுக்குக் கிருஷ்ணர் வேடமிட்டு அழகு பார்க்கும் காட்சி - என்னே அழகு!!!!
படம்: நன்றி தினமலர்


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வெளுத்துப்போன வெள்ளைக்காரன்

ஒரு வெள்ளைக்காரனுக்கு இரட்டைக் குழந்தைகள் (Twins) பிறந்தன!.
அவர்களுக்கு Tin என்றும் Martin பெயர் வைத்தான்

அடுத்த ஆண்டே மீண்டும் அவனுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன
Peter & Repeter அவர்களுக்கு பெயர் வைத்தான்.

சோதனையாக, அடுத்த டெலிவரியிலும் அவனுடைய மனைவிக்குப் பிறந்தது
இரட்டைக் குழந்தைகளே!
Max & Climax. அவர்களுக்கு பெயர் வைத்தான்.

அதிசயமாக அடுத்தும் இரண்டு பிறக்க, சலித்துப் போனவன். அவர்களுக்குப் பெயரை வைத்து
விட்டு முதல் வேலையாகக் குடும்பக் கட்டுப்பாடு’ சிகிச்சையை மேற்கொண்டான்.

கடைசி ஜோடிக்கு அவன் வைத்த பெயர்:
TIRED & RETIRED!
====================================================


கனவுக் கன்னி படம்?

அது இல்லாமலா; கீழே உள்ளது!
V
V
V
V
V
V

முகத்தைச் சுழிக்காதீர்கள். இது மூத்த குடிமகன்களுக்காகப் போட்டது.
இளவட்டங்களுக்கான படம் அடுத்து உள்ளது!

V
V
V
V
V
V

அடுத்து உள்ள படம் உண்மைத்தமிழருக்காகப் பதிவிடப்பட்டுள்ளது.
அதையும் பார்த்து விட்டுப்போங்கள். பார்ப்பதில் தவறில்லை.
ஊனா தானா ஒன்றும் கோபித்துக் கொள்ளமாட்டார்!

V
V
V
V
V
V

பெண்கள் அடக்கமாக இருந்தால்தான் அவருக்குப் பிடிக்கும். ஆகவே
துப்பட்டாவை முழுமையாகப் போர்த்திக் கொண்ட நிலையில்
ஐஸ் உள்ள படம்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

Wednesday, July 15, 2009

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

ஒருவர் அதற்கு வழி சொல்கிறார்!
ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்திப் பாருங்கள்.
படம் பெரிதாகத் தெரியும்!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V




வாழ்க வளமுடன்!

Tuesday, July 07, 2009

நகைச்சுவை: அலுவலகங்களில் அதுக்கும் வசதி வந்துவிட்டது!

நகைச்சுவை: அலுவலகங்களில் அதுக்கும் வசதி வந்துவிட்டது!

”எதுக்கு வசதி?”

”அதை நான் சொல்லக்கூடாது! நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள்”

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V




1


2


3


4


5

வாழ்க வளமுடன்!

Sunday, July 05, 2009

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

எச்சரிக்கை: சொந்த சரக்கல்ல; மின்னஞ்சலில் வந்தது
மொழிமாற்றம் மட்டும் அடியேனின் கைவண்ணம்!

ஜனத்தொகை 100 கோடி

10 கோடி ஓய்வில் அல்லது விருப்ப ஓய்வில் இருக்கும் முதியவர்கள்

10 கோடிப் பேர்கள் அரசில், அரசியலில், அல்லது அரசுத்துறையில்
(அவர்களை வேலை வாங்குவது பெரும்பாடு)

34 கோடிப் பேர்கள் வறுமைக் கோட்டில். அல்லது நடுத்தரக்கோட்டில்
கோட்டைத் தாண்ட முடியாத நிலையில் விலைவாசி அவர்கள் அழுத்திப்
பிடித்துக் கொண்டிருக்கிறது

ஒரு கோடி அறிவுஜீவிகள் ஐ.டி. துறையில்
(அவர்கள் வேலை செய்வது வளர்ந்த நாடுகளுக்காக)

25 கோடி பள்ளியில் அல்லது கல்லூரியில்

1 கோடி ஐந்து வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள்

15 கோடி வேலையில்லாதவர்கள், வேலை தேடுபவர்கள்

ஒரு கோடி எப்போதும் மருத்துவமனையில் அல்லது மருத்துவ மனையை நோக்கி

ஒரு கோடி சிறையில், விசாரனையில் அல்லது நீதிமன்ற வளாகங்களில்

இரண்டு கோடி ஆசாமிகள் மதுவிற்பனையில் அல்லது அது கிடைக்கும்
இடங்களில்

மீதம் இருப்பது நீங்களும் நானும்தான்!

நீங்கள் என் பதிவைப் படித்துக் கொண்டிருக்கிறீகள்;
நான் உங்கள் பின்னூட்டத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.



வாழ்க வளமுடன்!

Friday, July 03, 2009

நகைச்சுவை: இதுதான்டா இந்தியா!

நகைச்சுவை: இதுதான்டா இந்தியா!

டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் வெளிவந்த நகைச்சுவைப் படங்கள்
ஒன்பதை உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்

பார்த்து ரசியுங்கள்

இறக்குமதிச் சரக்கு; மின்னஞ்சலில் வந்தது!

1

2

3

4

5

6

7

8

9

இந்த ஒன்பது படங்களில் எது அசத்தலாக உள்ளது?
============================================================

வாழ்க வளமுடன்!

Wednesday, July 01, 2009

நகைச்சுவை: நேற்று, இன்று & நாளை

நகைச்சுவை: நேற்று, இன்று & நாளை

இது நகைச்சுவைப் பதிவு.உம்மன்னா மூஞ்சிகள்
எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்கவும்


மற்றவர்கள் ஸ்க்ரோல் செய்து பார்க்கலாம்

தலைப்பு: நேற்று, இன்று & நாளை
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V




1. நேற்று!


2. இன்று!

3. நாளை ?
++++++++++++++++++++++++++++++++++++++++
டிஸ்க்ளெய்மர்:
நம்ம ஊர்ப் பெண்கள் மிகவும் சாதுவானவர்கள். நல்லவர்கள். குத்து விளக்குகள்
இதில் குறிப்பிடப்பெற்றுள்ளவர்கள் எல்லாம் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.ஆகவே நம் ஊர்ப் பெண்ணினக் காவலர்கள் இதைப் பார்த்துவிட்டுக் குஸ்திக்கு வரவேண்டாம்.

இது இறக்குமதிச் சரக்கு (படங்களே அதற்குச் சாட்சி)


வாழ்க வளமுடன்!

Tuesday, June 30, 2009

போட்டிக்கதை: மணக்கும் குழம்பும் ருசிக்கும் பாயாசமும்!

போட்டிக்கதை: மணக்கும் குழம்பும் ருசிக்கும் பாயாசமும்!
----------------------------------------------------
(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை
போட்டிக்காக எழுதப்பெற்றது)

"அடுத்த பிறவி என்று ஒன்று இருந்து - ஒருவர் இறந்த பிறகு, அவரிடம்
இருக்கும் சொத்துக்களை, சேமித்து வைத்துள்ள பணத்தை அடுத்த
பிறவிக்கு எடுத்துக் கொண்டு போகலாம் என்ற வசதியையும் கடவுள்
கொடுத்திருந்தால் - ஒரு பேச்சுக்கு என்று வைத்துக்கொள்ளுங்களேன்
- உங்கள் அப்பச்சி உங்களுக்கென்று எதை வைத்துவிட்டுப் போயிருப்பார்
- எவற்றையெல்லாம் கொண்டு போயிருப்பார் - சொல்லுங்கள் பார்க்கலாம்"
என்று கதிரேசன் கேட்டவுடன் அவரது நண்பர் ராமண்ணன் புன்னகைத்தார்.
யோசனையில் ஆழ்ந்து விட்டார்.

ராமண்ணனின் முழுப்பெயர் இராமநாதன் செட்டியார். வயது 50 ஆகிறது.
அவர் கதிரேசனுக்கு சமவயதுக்காரர். இருவரும் ஆயத்த ஆடை
ஏற்றுமதியாளர்கள். திருப்பூரில் வாசம். அண்ணன் என்று ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வார்கள். அதெல்லாம் ஒரு மரியாதைக்காகத்தான்.

"என்ன மெளனமாக இருகிறீர்கள் - கற்பனை செய்து மனதில் தோன்றுவதைச்
சொல்லுங்கள்" என்று தொடர்ந்து சொன்னார் கதிரேசன்.

உடனே பட்டென்று பதில் சொன்னார் அவர்.

"இதில் கற்பனைக்கெல்லாம் ஒன்றும் வேலையில்லை. உண்மையைச்
சொன்னால் - எங்கள் அப்பச்சி எங்களுக்கு ஒன்றையும் வைத்து விட்டு
போயிருக்கமாட்டார். மேலும் எங்கள் இடுப்பில் இருக்கும் பட்டுக்கயிரைக்
கூட நான் கட்டியது என்று உருவிக் கொண்டு போயிருப்பார்"

"பிறகென்ன? இருக்கும் ஐம்பது கோடி ரூபாய் சொத்தும் இலவசமாக
வந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்குள் ஏன் இவ்வளவு
சண்டை, சச்சரவுகள்? உடன் பிறந்தவர்கள் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து
பேசி சந்தோசமாக அவற்றைப்பிரித்துக் கொள்ளுங்களேன்.

"இல்லை கதிரேசன், பிரச்சினை பிறந்தவர்களால் இல்லை. எங்கள் வீட்டிலுள்ள
அண்ணன், தம்பி ஆச்சி, தங்கைகளுக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை. எங்கள்
அறுவருக்கும் திருமணம் என்ற ஒன்று நடக்காமல் இருந்திருந்தால் நாங்கள்
சின்னவயதில் இருந்ததைப்போன்று அன்பாகப் பாசமாக, ஒற்றுமையாக இன்று
வரை இருந்திருப்போம்.பிரச்சினை எல்லாம் வந்தவர்களால்தான். எங்கள் வீட்டுப்
படியேறிவந்த மாப்பிள்ளைகள், மருமகள்களால்தான் எல்லாச் சிக்கல்களுமே.
என் மனைவியையும் சேர்த்துதான் இதைச் சொல்கிறேன். அரிசி, பருப்பு, வெல்லம், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் என்று சேர்ந்து இனிக்கும் பாயசமாக இருந்த எங்கள் வாழ்க்கையில் உப்பு, புளி, மிளகாய்த்தூள் என்று காலதேவன் பல பொருட்களைக் கொட்டிக் கலந்து விட்டுப் போய்விட்டான். நாங்கள் இப்போது ருசிக்கும் பாயசமாகவும் இல்லை மணக்கும் குழம்பாகவும் இல்லை!"

"வந்தவர்களை மட்டும் குறை சொல்லாதீர்கள் ராமண்ணே! உங்கள் ஆறு
பேர்களுக்கும் இ¢டையே தற்போது ஒரே மாதிரியான எண்ணங்கள், சிந்தனைகள்,
செயல்பாடுகள் உள்ளனவா சொல்லுங்கள்!"

"எங்கள் ஆறுபேர்களுடைய எண்ணம், சிந்தனை, செயல்பாடுகள் எல்லாம் கெட்டுப் போய் விட்டன. ஒப்புக்கொள்கிறேன். அதற்குக் காரணம் நான் சொன்னதுதான். எங்களைக் கட்டிக் கொண்டவர்களால் ஏற்பட்டதுதான் அது!"

புன்னகைத்த கதிரேசன் அழுத்தமாகச் சொன்னார்.

"சாவியில்லாத பூட்டை யாரும் தயாரிப்பதில்லை. அதுபோல இறையமைப்பில்
தீர்வு இல்லாத பிரச்சினையே கிடையாது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைதான் உங்கள் பிரச்சினைக்கான சாவி. அதாவது தீர்வு!"

"நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் எங்களிடம் சாவிகள் இல்லை. சாவிகளெல்லாம் வந்தவர்களிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது. வைக்கப்போரில் கட்டியிருக்கும் நாயைப் போல அவர்களும் திறந்து விடமாட்டார்கள். எங்களையும் திறக்க விடமாட்டார்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அவர்களிடம் இல்லை. அதை எங்களால் உண்டாக்கவும் முடியாது. அவர்களை மீறி ஒன்றும் செய்யவும் முடியாது"

"மற்றவர்களை விடுங்கள். நீங்கள் சொன்னால் உங்கள் மனைவி கேட்பாரா?
மாட்டாரா?"

"சொந்த விஷயம் என்றால் கேட்பாள். பெரிய வீட்டுப் பிரச்சினை என்றால்
கேட்க மாட்டாள். இல்லாத வீட்டில் இருந்து வந்தவள் என்பதற்காக, தன்
நாத்தினார்கள் இருவரும் தன்னைக் கழுதையை விடக்கேவலமாக நடத்தினார்கள் என்கின்ற ஆதங்கம் அவள் மனதில் ஆறாத ரணமாக இன்றைக்கும் உள்ளது. அதை எப்படி ஆற்றுவது நீங்களே சொல்லுங்கள்?''

"சரி இந்த நாற்றச் சண்டையால் எதை இழக்கிறோம்? எதெது முடங்கிக் கிடக்கிறது என்பதை ஒருவர்கூட உணரவில்லையா?"

"என்னைத் தவிர யாரும் உணரவில்லை. உணரும் நிலையிலும் இல்லை.
எல்லாவற்றிற்கும் தன்முனைப்புதான் (ego) காரணம். ஒருமுறை எடுத்துச் சொன்ன போது என்ன சொன்னார்கள் தெரியுமா?"

"என்ன சொன்னார்கள்?"

"உனக்கு மனசிருந்தால் ஒன்றும் வேண்டாம் என்று நீ விட்டுக்கொடுத்துவிட்டுப்போ. மற்றதை சட்டப்படி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார்கள். பழநியாண்டவன் சித்தம் அதுவாகத்தான் இருக்கும் என்றால் அதற்கும் நான் தயார் என்று சொல்லி விட்டுவந்தேன்"

"எப்போது சொன்னீர்கள்? யாரிடம் சொன்னீர்கள்?"

"எங்கள் பெரிய அண்ணனும், இரண்டாவது அண்ணனும் ஒரு கூட்டணியாக
உள்ளார்கள். அவர்களிடம்தான், சென்ற வாரம் நடந்த தர்க்கத்தில் சொல்லிவிட்டு
வந்தேன்"

"ஆண்டவன் சித்தம் என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா? பாருங்கள் இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும்" என்று சாமி வந்ததைப் போல சொன்னார் கதிரேசன்.

ராமண்ணன் வியப்பு மேலிடக் கேட்டார், "எப்படிச் சொல்கிறீர்கள்?"

"பழநியப்பன் சித்தநாதன். சித்தர்களுக்கெல்லாம் நாதன் அவன். அரிய சக்திகளை
உடையவன். தன்னை நம்பியிருக்கும் பக்தர்களுக்கெல்லாம் அருள்பாலிப்பவன் அவன். அவன் சித்தம் என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா? என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்" என்று உணர்வு மேலிடச் சொன்ன கதிரேசன் தங்களுடைய உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவாறு எழுந்து விட்டார்.

என்ன நடந்தது?

மேலே படியுங்கள்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ராமநாதனின் அப்பச்சி மெய்யப்ப செட்டியார் அவர்கள் தான் உயிரோடு இருந்த
காலம்வரை எல்லாவற்றையும் தன் காலடியிலேயே வைத்திருந்தார். விளங்கச்
சொன்னால் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார்.

அபரிதமான சம்பாத்தியம். பங்கு வணிகத்தில் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. மண் கூடப் பொன்னானது. உப்புமா கம்பெனிகூட அவர் பங்கை வாங்கினால் உலகளாவிய கம்பெனியாக மாறியது. நான்கு மகன்களையும் நன்றாகப் படிக்க வைத்தார். இரண்டு மகள்களையும் நன்றாகப் படிக்க வைத்ததோடு, கொட்டிக் கொடுத்துப் பெரிய இடங்களில் மணம் செய்தும் வைத்தார்.

பத்து வருடங்களுக்கு முன்பு, அதாவது தன்னுடைய 72வது வயதில், ஒரு நாள்
பொட்டென்று போய்விட்டார். வீட்டோடு இருந்த நெடுங்குடிச் சமையற்காரரின்
சாப்பாட்டை மத்தியானம் சாப்பிட்டு விட்டுப் படுத்தவர். எழுந்திரிக்கவேயில்லை.
அவருக்கு முன்பாகவே அவரது மனைவியும் போய்ச் சேர்ந்திருந்ததால், அவரை
எழுப்பவும் ஆள் இல்லை.

அடுத்தவீட்டுச் செட்டியார்தான், அவரின் முகப்பு அறைக் கதவைத் தட்டிக் கண்டு
பிடித்து அனைவருக்கும் தகவல் சொன்னார்.

கேதத்திற்கு வந்தவர்கள் 'நல்ல சாவு' என்ற சான்றிதழை வழங்கிவிட்டுப் போனார்கள்

மரணத்திற்கு மட்டும்தான் முன்னுரிமையும் இல்லை, வயது வரிசையும் இல்லை. எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. அவருக்கு ஆயுசுப் பலனை எழுதிக் கொடுத்த ஜோதிடர்கூட 90 வயது வரை வாழ்வார் என்று எழுதிக்
கொடுத்திருந்தார்.

பதினெட்டு ஆண்டுகளை எந்தக் கணக்கில் பற்று எழுதினான் காலதேவன் என்பது
தெரியவில்லை. தெரிந்து என்ன ஆகப்போகிறது? போனவர் போனவர்தானே!

இருந்தவரை திடகாத்திரமாகத்தான் இருந்தார். அதனால்தான் எதையும் தன்
மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கவில்லை. உயிலும் எழுதிவைக்கவில்லை.
பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தார். எதற்கும் வாய்ப்பே இல்லாமல் காலதேவன் அவரை அள்ளிக் கொண்டு போய்விட்டான்.

அதற்குப் பிறகுதான் சிக்கல் ஆரம்பமானது. அவரின் இறப்பை அறிந்த
வங்கி அதிகாரிகள் அவர் பெயரில் இருந்த வங்கிக் கணக்குகள், வைப்புத்
தொகைகளிலெல்லாம் சிவப்பு மையால் சுழி போட்டுவிட்டார்கள். அதுவே ஆறு
கோடிக்குமேல் தேறும். பிள்ளைகளில் ஒருவர் கூட அந்தப் பணத்தில் கைவைக்க
முடியவில்லை. வாரிசுச் சான்றிதழ், ஆட்சேபனையின்மைக் கடிதம், உரிமை
கோரும் கடிதம் என்று ஏகத்துக்கும் கெடுபிடி.

அப்பச்சியின் சவண்டிக்குள்ளாகவே இவர்களுக்குள் ஒற்றுமை போய்விட்டது.
முதலில் வீட்டில் இருந்த 200 கிலோ வெள்ளிப் பாத்திரத்தில் ஆரம்பித்த சண்டை,
இரண்டு இடங்களில் அப்பச்சிக்குத் திரேக்கியம் செய்யும் நிலைமையில் முடிந்தது. கடைசியில் வங்கி லாக்கர்களில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத நிலைமையும் ஏற்பட்டுவிட்டது.

பெட்டகத்தில் இருந்த இடம், பூமி கிரயப்பத்திரங்கள் எல்லாம் ஒரு மகன் கைக்குப்
போய்விட்டது. பிரோ நிறைய இருந்த பங்குப் பத்திரங்கள் எல்லாம் இன்னொரு
மகன் கைக்குப் போய்விட்டது. மொத்தத்தில் யாரும் எதையும் விற்கமுடியாத நிலைமை. யாரும் எதையும் அனுபவிக்க முடியாத நிலைமை.

நடப்புச் சண்டைகளால் அனைவருக்கும் பொழுது மட்டும் நன்றாகப் போகிறது!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவிற்குச் சென்று விட்டுத் திரும்பிய இராமநாதன் செட்டியாரை, வக்கீல் நோட்டிஸ் வரவேற்றது. அவருடைய கூட்டணியில் இருந்த மூன்றாவது அண்ணன்தான் அதை அனுப்பியிருந்தார்.

பத்து ஆண்டுகளாகப் பிரிபடாமல் இருக்கும் தங்கள் குடும்பச் சொத்தைத் தன்
காலத்திற்குள் பிரிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாலும், அதற்குரிய சூழ்நிலை தங்கள் குடும்பத்தில் இல்லாததாலும், அசையாத சொத்துக்களில் தனக்குரிய பங்கைப் பிரிபடாத பங்காகத் (undived share in the properties) தான்
விற்க இருப்பதாகவும், அதற்கான ஏற்பாட்டில் தான் இறங்கியிருப்பதாகவும், அப்படி விற்கும் நிலையில் குடும்பத்தில் உள்ள மற்ற பங்குதாரர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்குத் தான் பொறுப்பில்லை என்றும் எழுதியிருந்தார்.

ராமநாதனுக்குச் சள்ளையாக இருந்தது. திருப்பூரில் தனது வியாபரத்தைக் கவனிப்பதா? அல்லது இதுபோன்ற நச்சரவுகளில் சிக்கிக் கொண்டு உழல்வதா?

தன் மனைவியை அழைத்து நோட்டிஸைக் காண்பித்தார்.

ஆச்சி தெளிவாகப் பேசினார்கள்.

"என்னை மட்டும்தான் உருட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது உங்களையும்
உருட்ட ஆரம்பித்து விட்டார்கள். வீட்டில் ஐம்பது அறைகள் இருந்தாலும் ஒரு
அறையில்தான் படுக்க முடியும். ஆயிரம் மாடுகள் இருந்தாலும் வேளைக்கு ஒரு
ஆழாக்குப் பால்தான் குடிக்க முடியும். நமக்கு நீங்கள் தற்போது சம்பாதிப்பது
போதும். சம்பாதித்துச் சேர்த்துவைத்திருப்பது போதும். உங்கள் அப்பச்சியின்
சொத்து ஒன்றுகூட வேண்டாம். எனக்கு ஒன்றுகூட வேண்டாம் என்று அத்தனை
பேருக்கும் நீங்கள் நோட்டிஸ் கொடுத்துவிடுங்கள். அப்போதுதான் அடங்குவார்கள்"

செவிட்டில் அரைந்தாற்போன்று இருந்தது மனைவின் சொற்கள்.

மின்னலென ஒரு முடிவிற்கு வந்தார் ராமநாதன்.

அடுத்த இரண்டு நாட்களில் செட்டிநாட்டிலுள்ள தன் சொந்த ஊருக்குச் சென்று
அதைச் செயல்படுத்தத் துவங்கினார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிவன் கோவில் காரியக்காரரும், மற்றும் கூடியிருந்த அறங்காவலர்களும் திகைத்துப் போய்விட்டார்கள்.

தன் தந்தை வழிப்பூர்வீகச் சொத்துக்கள் அனைத்தையும் சிவன் கோவிலுக்குத்
தானமாக அளிக்கிறேன் என்று அவன் எழுதிக் கொண்டுவந்து கொடுத்த பத்திரத்தை ஒன்றிற்கு இரண்டுமுறை படித்துப் பார்த்தவர்களுக்கு வியப்பாகவும் இருந்தது. எழுதிக் கொடுத்த பத்திரத்துடன் சொத்து விவரம் பற்றிய லிஸ்ட்டும் விலாவரியாக இருந்தது. தற்போதைய மதிப்பும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் அறுபது கோடி ரூபாய்கள். வீட்டில் பிறந்த
பெண் குழந்தைகளுக்கும் சேர்த்து சம பங்காகப் பிரித்தால்கூட கோவிலுக்கு பத்துக் கோடி ரூபாய் வந்து சேரும்.

வந்தவர் தன் மனைவி, மகன், உடன் ஒரு வழக்குரைஞர் சகிதமாக பக்கா
ஏற்பாட்டுடனேயே வந்திருந்தார்.

முதலில் சமாதானப் படுத்த முயன்றவர்கள், அவர் தெளிவாக இருந்ததால் முறைப்படி கோவிலின் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்தார்கள்.

அடுத்து நடந்ததெல்லாம் முக்கியமில்லை. கோவிலின் அறங்காவலர் ஒருவர் மிகுந்த அரசியல் செல்வாக்கு உடையவர். தில்லியில் செளத்பிளாக் எனப்படும் மத்திய அரசின் பிரதான அலுவலகத்தில்கூட கோவில் மடப்பள்ளியில் நுழைவதைப் போன்று சர்வ சாதாரணமாக நுழைந்து திரும்பக்கூடியவர்.

ஆகவே எல்லாம் கைச் சொடுக்கிலேயே நடந்து முடிந்தது

ராமாநாதனின் வீட்டு உறுப்பினர்கள் அழைக்கபெற்றார்கள், நடந்த ஒரு வாரப்
பஞ்சாயத்தில் அனைத்தும் சீரானது. மூன்று மாத காலத்தில் அனைத்தும் நேரானது. ராமநாதனின் சொத்துக்களை உடன்பிறப்புக்கள் எடுத்துக் கொண்டு பணம் கொடுக்க கோவிலுக்கும் சுமார் பன்னிரெண்டு கோடி ரூபாய் வந்து சேர்ந்தது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்ன, கதை முடியவில்லையா?

அதெப்படி முடியும்? சித்தநாதன் கணக்கு ஒன்று பாக்கியிருக்கிறதே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து வந்த ஆவணியில், ராமநாதனின் மகனுக்கும், கதையின் துவக்கத்தில்
வந்தாரே கதிரேசன் - அவருடைய ஒரே மகளுக்கும் விமரிசையாகத் திருமணம்
நடந்தேறியது.

ராமநாதன், தோது, பணம், வற்றல் வரளி, முறுக்கு, மாவுருண்டை என்று எதுவும்
வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டதால், நொந்துபோன கதிரேசன், சும்மா
விடக்கூடாது என்று நினைத்து, திருப்பூர் பெருமாநல்லூர் ரோட்டில் இருந்த
அதுவும் புஷ்பா தியேட்டர் அருகில் இருந்த, தனக்குச் சொந்தமான இரண்டு
ஏக்கர் காலி மனையைத் தன் பெண்ணிற்குச் சீதனமாக எழுதிக் கொடுத்து விட்டார். அதன் சந்தை மதிப்பு முப்பது கோடி ரூபாய்.

காலி இடத்தை அப்படியே வைத்திருந்தால் யாராவது குடிசை போட்டுக் கொடி
ஏற்றிவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி, ராமநாதனும், அவருடைய
மகனுமாகச் சேர்ந்து அங்கே பெரிய வணிக வளாகம் கட்டுவதற்கான ஏற்பாட்டில் இறங்கியிருக்கிறார்கள்.

அதைவிடுங்கள். விஷயம் தெரிந்தவர்கள் ஊரில் என்ன பேசிக்கொள்கிறார்கள்
தெரியுமா?

"சிவன் கோவிலுக்குப் போன ராமநாதனின் பங்கு, சித்தநாதன் மூலம் இரட்டிப்பாகத் திரும்பி வந்துவிட்டது. அதுதான் சித்தநாதனின் மகிமை!"

அது முக்கியம் இல்லை; இதுதான் முக்கியம்:
விட்டுக் கொடுத்தவர்கள் என்றும் கெட்டுப்போனதில்லை! அதுதான் வாழ்க்கை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

Thursday, June 18, 2009

ஓஹோ, இதுதான் காதல் என்பதா?


ஓஹோ, இதுதான் காதல் என்பதா?

சிலர் காதல் வயப்பட்டு உருகிக் கொண்டிருப்பார்கள்.
காதலுக்கு வயப்பட்டு அலைபவர்களின் அடையாளங்கள் என்னென்ன?
அல்லது காதலின் அடையாளம்தான் என்ன?

நகைச்சுவையாக அல்லது நகைச்சுவையில்லாமல், படங்களுடன் ஒருவர்
காதலைப் பட்டியல் இட்டுள்ளார். சரிதானா, பார்த்துச் சொல்லுங்கள்!

இறக்குமதிச் சரக்கு

=================================================


1
2
3

4
5
6

7
-----------------------------------------------------------------------
ஏழு படங்களில் எது சரியாக உள்ளது? சொல்லிவிட்டுச் செல்லுங்கள்!

வாழ்க வளமுடன்!

Wednesday, June 17, 2009

நகைச்சுவை விளம்பரங்கள்


நகைச்சுவை விளம்பரங்கள்

நீங்கள் உம்மன்னா மூஞ்சியா? பதிவை விட்டு விலகுங்கள்
இது நகைச்சுவை ரசிகர்களுக்கான பதிவு.

விளம்பரங்களில்தான் எத்தனை வகை?
சில நகைச்சுவை விளம்பரங்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.
சிரித்து மகிழுங்கள்

1
மருத்துவமனை விளம்பரம்:
புகை பிடிப்பதால் உங்களின் எடை குறையும். முதலில் நுரையீரலின் ஒரு பகுதி

2
ஒரு நிறுவனத்தின் விளம்பரப் பலகை:
வெற்றி என்பது உறவு
அதிக வெற்றி; அதிக உறவு!
-------------------------------------
3
மதுவிற்கான விளம்பரம்:
குடியின் தீமைகளைப் பற்றிப் படித்தவுடன்
நிறுத்திவிட்டேன் - படிப்பதை!

4
எங்கள் தாத்தாவிற்குக் கண்ணாடி (Glass) தேவையில்லை
பாட்டிலைக் கையில் எடுத்தால் அப்படியே குடிப்பார்.

5
அழகு சாதன விளம்பரம்:
உங்கள் மகள் எப்போது பெரியவள் ஆகிறாள்?
ஒரு தடவைக்கு இரண்டு தடவை லிப்ஸ்டிக் பூசிக் கொள்ளும்போது!
உங்கள் மகன் எப்பொது பெரியவன் ஆகிறான்?
அம்மா பூசிவிட்ட லிப்ஸ்டிக்கைத் துடைத்துக் கொள்ளும்போது!

6
பாரில் இருந்த விளம்பரம்:
கவலையை மறப்பதற்காகக் குடிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
நுழையும்போதே பணத்தைச் செலுத்திவிடுங்கள்!

7
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியின் முன் உள்ள விளம்பரப் பலகை:
உங்கள் மனைவி கார் ஓட்ட விரும்பினால் குறுக்கே நிற்காதீர்கள்!

8
பார்பர் சலூன் விளம்பரம்:
எங்கள் வியாபாரம் செழிக்க எங்களுக்கு உங்கள் ‘தலை’ யீடு வேண்டும்!

9
போக்குவரத்து விளம்பரம்:
வாகனங்களை செலுத்துவதற்கு உங்கள் குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்
- அவர்கள் பெரியவர்கள் ஆகும்வரை.
ஆனுமதித்தால் அவர்கள் பெரியவர்கள் ஆகாமல் போய்விடும் அபாயம் உண்டு!

10
பியூட்டி பார்லர் கதவில் இருந்த விளம்பரம்:
இங்கிருந்து செல்லும் பெண்ணை நக்கலடிக்காதீர்கள். அவர் உங்களுடைய
பாட்டியாக இருக்கலாம்.She May Be Your Grandmother !

11
கொசுறு
ஆண்கள் ஏன் பொய் சொல்கிறார்கள்?
பெண்களின் கச்சா முச்சா கேள்விகளால்தான்!

இறக்குமதி சரக்கு; மொழி மாற்றம் மட்டும் அடியேனுடையது!

எது நன்றாக உள்ளது? சொல்லிவிட்டுப் போங்கள்!






வாழ்க வளமுடன்!

Monday, June 15, 2009

சிரிக்க மட்டுமே; சண்டைக்கு வர வேண்டாம்!

சிரிக்க மட்டுமே; சண்டைக்கு வர வேண்டாம்!

கீழே உள்ளவற்றைப் படியுங்கள். முடிந்தால் சிரியுங்கள்
சண்டைக்கு வரவேண்டாம்

1
காதலித்தது ஒருவரை;
கைப்பிடித்தது இன்னொருவரை
கைபிடித்தவர் கணவர் அல்லது மனைவியாகிறார்
காதலித்தவர் 'கடவுச்சொல்' ஆகிவிடுகிறார்!

*********
2
உலகின் அசத்தலான குழந்தை ஒன்றுதான்; ஒவ்வொரு தாய்க்கும் அது கிடைத்திருக்கிறது
உலகின் அசத்தலான மனைவி ஒருத்திதான்; ஒவ்வொரு பக்கத்து வீட்டுக்காரனுக்கும் அது கிடைத்திருக்கிறது!

*********
3
மனிதனின் கனவு

தாயார் நினைப்பதுபோல எப்போதும் நேர்மையாக இருப்பது
தன் குழந்தை நினைப்பதைப்போல எப்போதும் செல்வந்தனாக இருப்பது
மனைவி சந்தேகிப்பதைப்போல பல பெண்களின் உறவு கிடைப்பது!

*********
4
Husband & wife are like liver and kidney.
Husband is liver & wife Kidney.
If liver fails, kidney fails.
If kidney fails, liver manages with other kidney.

மின்னஞ்சலில் வந்தது. மொழி மாற்றம் மட்டும் அடியேனுடையது!


வாழ்க வளமுடன்!

Saturday, May 02, 2009

ஒன்றாய் மேலேபோன சாமியாரும், டாக்சி டிரைவரும்!

ஒன்றாய் மேலேபோன சாமியாரும், டாக்சி டிரைவரும்!

ஆசிரமம் வைத்து ஆயிரக் கணக்கான மக்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்த சாமியார் ஒருவரும், தில்லியில் டாக்சி ஓட்டிக்கொண்டிருந்த டாக்சி டிரைவரும், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இறந்துபோய் மேலுலகம் போய்ச் சேர்ந்தார்கள்.

இருவரின் கணக்குப் புத்தகத்தையும் பார்த்த சித்திரகுப்தன், டாக்சி டிரைவருக்கு சகல வசதிகளையும் உடைய அரண்மனையைக் காட்டித் தங்கும்படி சொல்லிவிட்டு, சாமியாருக்கு ஒரு ஓலைக் குடிலைக் காட்டி தங்கும்படி உத்தரவிட்டான்.

சாமியாருக்கு வருத்தம்

"எத்தனை பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தியிருப்பேன். எனக்கு இங்கே ஏன் இந்தக் கதி?"

சித்திர குப்தனிடம் மெல்லக் கேட்டார்.

அவன் அதிரடியாகப் பதில் சொன்னான்.

"உம்முடைய பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்த மக்களெல்லாம் தூங்கினார்கள். அவன் வண்டியோட்டிக் கொண்டு போகையில் அதில் சென்ற மக்களெல்லாம் தூங்காமல் இறைவனைப் பிராத்தனை செய்தார்கள்"

இப்போது தெரிகிறதா?

செய்யும் தொழில் முக்கியமில்லை! மக்களை என்ன செய்ய வைக்கிறோம் என்பதுதான் முக்கியம்!



வாழ்க வளமுடன்!

Wednesday, April 08, 2009

தண்ணியடிக்கும் இடத்திற்குத் தலைவர் வந்தால் என்ன ஆகும்?

தண்ணியடிக்கும் இடத்திற்குத் தலைவர் வந்தால் என்ன ஆகும்?

வீடியோ க்ளிப்பிங் உள்ளது.
என்ன ஆகும் என்று நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்


video


வாழ்க வளமுடன்!

Friday, April 03, 2009

எங்கேதான் அடிதடி இல்லை?

நமது நாட்டு மக்களவையில்தான் கைகலப்பு அடிதடி என்று நினைக்கிறீர்களா?
தவறு!
எங்கேதான் அடிதடி இல்லை?
மற்ற நாட்டு அவைகளில் நடந்த அடிதடிகள் படங்களாக உள்ளன. பார்த்துத்தெரிந்துகொள்ளுங்கள்..

1. Turkey

2. Mexico

3. Not known (Name written in Urdu)

4. South Korea


5. South Korea

6. Ukraine

7. Ukraine



8. Russia


9. Russia

10. Italy

11. தைவான்


12. தைவான்

13. இந்தியா

14. சோமாலியா

கையில் காலணியுடன் சண்டையில் இறங்கியிருக்கும்
நம்மூர் அம்மணிதான் இருப்பதிலேயே சூப்பர்!
=================================================

வாழ்க வளமுடன்!

Monday, March 23, 2009

எல்லாமே தேர்தலுக்காகத்தான்டா!

எல்லாமே வயிற்றுக்காகத்தான்டா என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் சொல்லாமலே கேள்விப்பட வேண்டியது இது:
எல்லாமே தேர்தலுக்காகத்தான்டா!

12 படங்கள் உள்ளன. நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

1

2

3

4

5

6

7

8

9

10


11

12

படங்கள் மின்னஞ்ச்லில் வந்தவை. எந்தப் படம் ந்ன்றாக உள்ளது?
வாழ்க வளமுடன்!

Tuesday, March 17, 2009

கத்தி இருக்கு : கவலை எதற்கு?

கத்தி இருக்கு : கவலை எதற்கு?

எட்டுப் படங்கள் உள்ளன. அனைத்தையும் பாருங்கள்
கடைசிப் படம் அசத்தலாக இருக்கும்; பார்க்கத்தவறாதீர்கள்.

இந்த எளிமை, செளகரியம் cheap & best எல்லாம் இந்தியாவில்
மட்டும்தான் கிடைக்கும். மற்ற வளர்ந்த நாடுகளில் சாத்தியமில்லை!















குழந்தைத் தொழிலாளர்கள் கூடாது என்று சட்டம் சொல்கிறதே!
இங்கெல்லாம் சட்டம் இல்லையா?
--------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

Monday, March 16, 2009

தொழும் இடத்தில்கூட எதற்காக இந்த அவசரம்?

தொழும் இடத்தில்கூட எதற்காக இந்த அவசரம்?

வீடியோ உள்ளது.தொழும் இடத்தில்கூட எதற்காக இந்த அவசரம்? நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
---------------------------------------------
வீடியோப் படத்தில் உள்ள காட்சி இயற்கையாக இருந்ததால் வலையேற்றினேன்
பின்னூட்டத்தில் வந்தவர்கள் நால்வரில் மூவர் அது செயற்கையாக உள்ளது என்று
கூறியதால், அதை நீக்கி விட்டேன். மெஜாரிட்டிக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்
அல்லவா?

அவர்களுக்கு நன்றி உரித்தாகுக!

படம் மின்னஞ்சலில் வந்தது.

வாழ்க வளமுடன்!

Tuesday, March 10, 2009

குட்டிப் பெண்னின் நாட்டியம்

குட்டிப் பெண்ணின் நாட்டியம்

இந்த வீடியோ உங்களுக்காகத்தான். பார்த்து ரசியுங்கள்

Switch on your audio!


video

வாழ்க வளமுடன்!

Friday, February 27, 2009

நன்றி சொல்வேன் உங்களுக்கு, விருதைக் கையில் தந்ததற்கு!

தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல் எனும் பிரிவில் எனது 'செட்டிநாட்டு வீடுகள்'
என்கின்ற கட்டுரைக்கு (தமிழ்மணம் விருதுகள் 2008) விருது கிடைத்துள்ளது. அதை
உங்களுக்கு மகிழ்வுடன் தெரியப்படுத்துகிறேன்

விருதுபெற்ற அந்தப் பதிவிற்கான சுட்டி இங்கே உள்ளது

வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!

தமிழ்மணம் விருதுகள் 2008ல் பங்கு பெற்றவர்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும்
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது ஆக்கங்களைத் தமிழ்மணம் திரட்டியின் மூலம் தொடர்ந்து பதிவிட்டு வருவதால்
அதன் மூலமே எனது பதிவுகள் பலரையும் சென்றடைகிறது.

தமிழ்மணம் நிர்வாகத்தினர்களுக்கு எனது உள்ளம் கனிந்த நன்றி !

மூன்று விருதுகளைப் பெற்ற பதிவர் டாக்டர் புரூனோ அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
அதேபோல தலா இரண்டு விருதுகளைப் பெற்ற உண்மைத்தமிழருக்கும், KRS (ரவி சங்கர்)
அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்

தமிழ்மணம் விருதைப் பற்றிய செய்தியை முதன் முதலில் தனி மின்னஞ்சல் மூலம்
தெரியப்படுத்திய நண்பர் நாமக்கல் சிபி அவர்களுக்கு சிறப்பு நன்றி உரித்தாகுக!

அன்புடன்
SP.VR.சுப்பையா

வாழ்க வளமுடன்!

Monday, February 16, 2009

செவிட்டில் அறைந்ததைப் போன்று ஒரு செய்தி!

செவிட்டில் அறைந்ததைப் போன்று ஒரு செய்தி!

என்ன செய்தி?

பதிவில் உள்ள ஒரு சிறு வீடியோ கிளிப்பிங்கைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
தெரியாமல் ஒரு நாளும் குறை சொல்ல வேண்டாம்."

படம் மின்னஞ்சலில் வந்தது!


video

வாழ்க வளமுடன்!

Sunday, February 08, 2009

மீண்டும் கோவைக்கு வந்த பாடும் நிலா!


மீண்டும் கோவைக்கு வந்த பாடும் நிலா!

6.2.2009 வெள்ளிக்கிழமை மாலை, கோவை P.S.G college of Technology
மைதானத்தில் அசத்தலாக ஒரு இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.
கோவை மேலும் குளிர்ந்தது. பலர் மெய்மறந்தனர்

Zee தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தாரும், Hello FM' பண்பலை வானொலி
நிறுவனத்தாரும் இணைந்து அதை நடத்தினர்கள்.

நிகழ்ச்சியின் ஹைலைட் பாடும் நிலா பாலு அவர்கள் அந்த நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு பாடியதாகும். அவருடன் இரண்டு இளம் திரைப்படப்
பாடகிகளும் சேர்ந்து பாடியது மேலும் சுவையாக இருந்தது.

யார் அவர்கள் என்கிறீர்களா?

ஒருவர் தீபா, இன்னொருவர் ரோஷிணி!

நினைத்தாலே இனிக்கும்' என்று தலைப்பிடப் பெற்றிருந்த அந்நிகழ்ச்சிக்கு,
உண்மையிலேயே இனிமையை உண்டாக்கும் லக்ஷ்மண் ஸ்ருதி' இசைக்குழுவினரின்
இசை, சுவையைக் கூட்டி, எண்ணற்ற பாடும் நிலா பாலு அவர்களின் ரசிகர்களை
மெய்மறக்கச் செய்தது.

மாலை 6:05 மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சி இரவு 10:30 மணி வரை நடைபெற்றது.

Over to the pro gramme!
-------------------------------------------------------------------------
6:57 மணிக்குத்தான் திரு.S.P.B அவர்கள் மேடை ஏறினார். வழக்கம்போல தன்
பெற்றோர்களையும் தன்னுடைய ஆசான்களையும் நினைவு கூர்ந்து விட்டு,
ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் வணக்கம் சொல்லி விட்டுத் தன் முதல்
பாடலைப் பாடத் துவங்கினார்

முதல் பாட்டாக என்ன பாடலைப் பாடினார்?

"நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே"

படம்: தூங்காதே தம்பி தூங்காதே
-------------------------------------------------------------------------
2
மணி 7:03
முதல் பாட்டு எப்போதுமே அம்மாவிற்குத்தான் என்று விளக்கம் சொன்னவர்,
அடுத்த பாடல் காதலிக்கு என்றவுடன் கரகோஷம் விண்ணைப் பிளந்தது,

"காதலின் தீபம் ஒன்று - ஏற்றினாளே
என் நெஞ்சில் இன்று"

பாடலுக்கு வயலின் இசைக்கருவிகளும், புல்லாங்குழலும் சிறப்பைச் சேர்த்தன.

படம்: தம்பிக்கு எந்த ஊரு?"
-------------------------------------------------------------------------
3.
மணி 7:10
பாடியது: ரோஷிணி
படம் : பட்டியல் என்னும் திரைப்படம்

"நம்ம காட்டில...... மழை பெய்யுது
நம்ம பாட்டில....... சுதி ஏறுது!"
--------------------------------------------------------------------------
4.
மணி 7:16
பாடியவர்: ரோஷிணி
படம்: தசாவதாரம்

"முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா"
--------------------------------------------------------------------------
5.
மணி 7:23
திரு.S.P.B அவர்கள் பாடினார்கள்
படம்: நிழல்கள்

"மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது..

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்..
(மடை திறந்து..)"

அதே உற்சாகத்துடனும், துள்ளலுடனும் பாடினார் என்பதை
இங்கே குறிப்பிட வேண்டும்!
வாழ்க அவருடைய உற்சாகம்: வளர்க அவருடைய இசை நேயம்!
--------------------------------------------------------------------------------------
6.
மணி 7:30
திரு.S.P.B அவர்கள் பாடகி தீபாவுடன் இணந்து பாடினார்

"வளையோசை கலகலவென...." என்று துவங்கும் பாடலைக்
கலக்கலாகப் பாடினார்கள்

படம்: சத்யா
--------------------------------------------------------------------------------------
7.
மணி. 7:35
பாடியவர்கள்: லக்ஷ்மண்சுருதி இசைக்குழுப் பாடகர்கள்

"டாக்ஸி டாக்ஸி நண்பா நீயொரு இலவச டாக்ஸி"

படம்: சக்கரைக்கட்டி
--------------------------------------------------------------------------------------
8.
மணி 7:43
அசத்தலாக சாக்சபோன் ஒலிக்க, துவங்கும் பாடலை
திரு.S.P.B அவர்கள் பாடகி ரோஷிணியுடன் இணைந்து பாடினார்

படம்: உல்லாசப் பறவைகள்

"ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்

(ஜெர்மனியின்)

சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
காதல் நாயகனே
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்

(சித்திரமே..)"
----------------------------------------------------------------------------------------
9
மணி 7:49
திரு.S.P.B அவர்கள் பாடகி தீபாவுடன் இணந்து பாடினார்

துவக்கத்தில் ஒலிக்கும் ஹம்மிங் இசை, அப்படியே கேட்பவர்களைக்
கிறங்கடிக்கும் விதமாக இருந்தது.

படம்: சிப்பிக்குள் முத்து.

பாடல்: துள்ளி துள்ளி...

"துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா ( ஆஹா )
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
ஆ..ஆ. .. ஆ.. ஆ...ஆ...ஆ
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
மன்னன் உன்னை மறந்ததென்ன.........
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
இரவென்றால் மறுனாளே விடியும் உந்தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்"
-----------------------------------------------------------------------------------------------------
10
மணி 7:56
திரு.S.P.B அவர்கள் குழுப் பாடகி அனிதாவுடன் இணந்து பாடினார்
படம்: விக்ரம்"

"வனிதா மணி வன மோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி வந்தாடு"
-----------------------------------------------------------------------------------------------------
11
மணி 8:03
லக்ஷ்மண்சுருதி' இசைக் குழுவினர் பாடினார்கள்
படம்: தாம் தூம்

துவக்கத்தில் ஹம்மிங்க் பாடிய கலைஞர்கள் அசத்தலாக இசைத்தார்கள்

"அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்"
-----------------------------------------------------------------------------------------
12
மணி 8:08
லக்ஷ்மண்சுருதி' இசைக் குழுவினர் பாடினார்கள்
படம்: சிலம்பாட்டம்


"ஏ டோலு மையா டாலு மையா
டோலு மையா டையா
ஏ பையா ஏ டையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா

இன்னாம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போவலாம்
வோட்காவை போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரமாச்சு
பப்பும்தானே மூடிப்போச்சு
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி"
--------------------------------------------------------------------------------------
13
மணி 8:15

அனைவரும் எதிர்பார்த்திருந்த சூப்பர் ஹிட் பாடலை
திரு.S.P.B அவர்கள் பாடினார்

படம்: புதுப்புது அர்த்தங்கள்

"கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
(கல்யாண மாலை..)
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
(கல்யாண மாலை..)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..
(கல்யாண மாலை..)

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்
(கல்யாண மாலை..)"
-----------------------------------------------------------------------------------------
14
மணி 8:21
அடுத்த பாடலையும் திரு.S.P.B அவர்களே பாடினார்
படம்: நினைத்தாலே இனிக்கும்

"எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்"
------------------------------------------------------------------------------------------
15
மணி 8:29
சிறுவன் ஒருவன் பாடினான்
படம்: சகலகலாவல்லவன்

"ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ"
--------------------------------------------------------------------------------------------
16
மணி 8:35
லக்ஷ்மண்சுருதி' இசைக் குழுவினரின் பாடல்
படம்: வில்லு

"ஏ ராமா ராமா, ராமன்கிட்டே வில்லைக் கேட்டேன்
ஏ பீமா பீமா பீமன்கிட்டே கதையைக் கேட்டேன்"
-------------------------------------------------------------------------------------------
17
மணி: 8:40
திரு.S.P.B அவர்கள் பாடகி தீபாவுடன் இணந்து பாடினார்
படம்: அடிமைப் பெண்
பலரின் வேண்டுகோளுக்கிணங்க இப்பாடலைப் பாடுவதாகக் குறிப்பிட்டார்

"ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட

(ஆயிரம்)

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன

இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ"
-----------------------------------------------------------------------------------------
18
மணி 8:47
திரு.S.P.B அவர்கள் அசத்தலாகப் படினார்.
படம்: காதல் ஓவியம்

"நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம்
நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம்
என் நாதமே வா..

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா
(சங்கீத..)"
------------------------------------------------------------------------------------------
19
மணி: 8:55
பாடகி ரோஷிணி பாடினர்.
லக்ஷ்மண்சுருதி' இசைக் குழுவினர் சேர்ந்து பாடினார்கள்.

படம்: தாமிரபரணி

"கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீச முடிய செஞ்சிக்குவேன் மோதிரமா
செவப்பாக இருக்காளே கோவைப்பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையால ஆயுள் ரேகை தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோலியை தான் காட்டுதம்மா
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா"
------------------------------------------------------------------------------------------
20
மணி 9:00
ரோஷிணி பாடினார்
படம்: நல்லவனுக்கு நல்லவன்

"வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே"
------------------------------------------------------------------------------------------
21
மணி 9:05
படம்: பூ
பாடல்: தட்டான் தண்ணிக்குள்ள

"டட்டா டட்டா டடடா
டார டட்டா டடடா
ச்சூ ச்சூ மாரி
ச்சூ ச்சூ மாரி

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை இரண்டும் பொந்துக்குள்ள
ச்சூ ச்சூ மாரி
குத்தாளத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள
ச்சூ ச்சூ மாரி"
------------------------------------------------------------------------------------------
22
மணி 9:10

சிறுவன் ஒருவன் பாடினான்
நன்றாகப் பாடினான்
படம்: காதலில் விழுந்தேன்

"நாக்க மூக்க அட்றா அட்றா நாக்க மூக்க"
-------------------------------------------------------------------------------------------
23
மணி 9:16
திரு.S.P.B அவர்கள் அருமையாகப் பாடினார்.
படம்: புன்னகை மன்னன்

"என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா..

(என்ன)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே"
-------------------------------------------------------------------------------------------
24
மணி 9:21
திரு.S.P.B அவர்கள் உடன் ரோஷிணியும் சேர்ந்து பாட, அருமையாகப் பாடினார்.

படம்: நீங்கள் கேட்டவை (இசை, இளையாராஜா)

"அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி
கொடியே என்னைக் கண்டு சொக்காதடி"
------------------------------------------------------------------------------------------
25
மணி 9:28
மிமிக்கிரி நிகழ்ச்சி:
அசத்த்ப்போவது யாரு நிகழ்ச்சிப் புகழ்
திரு. மைக்கேல் அவர்கள் பலகுரல் நிகழ்ச்சிஒன்றை நிகழ்த்தினார்

சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்ச்சி சற்று வித்தியாசமாகவும்
சுவையாகவும் இருந்தது.
-------------------------------------------------------------------------------------------
26
மணி: 9:50
திரு.S.P.B அவர்கள் அருமையாகப் பாடினார்.
படம்: நினைவெல்லாம் நித்யா

"பனிவிழும் மலர் வனம் - உன்
பார்வை ஒரு வனம்"
-------------------------------------------------------------------------------------------
27
மணி 9:56
திரு.S.P.B அவர்கள் கலக்கலாகப் படினார்.

படம்: சிவாஜி

"சூரியனோ சந்திரனோ யாரிவனோ
சட்டென சொல்லு
சேரப்பாண்டிய சூரனுமிவனா சொல்லு சொல்லு
சட்டென சொல்லு (2)

பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கெட்டதைப் பட்டென சுட்டிடும் சிவனோ

ஏ பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா
மெட்ராஸுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லேலக்கா பல்லேலக்கா ஒட்டுமொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா
ஓஹோ தாவணி பெண்களும்
தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா
நம்ம களத்துமேடு கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு"
----------------------------------------------------------------------------------
இந்தப் பாடலுடன் - அதாவது மணி இரவு 10:00ஐத் தாண்டி விட்டதால்
அடியேன் கிளம்பி விட்டேன்.

இதற்குப் பிறகு நிகழ்ச்சி எத்தனை மணிவரை நடந்தது என்பது தெரியவில்லை
நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் எவரேனும் தகவல் தெரிவித்தால் பதிவில்
சேர்த்துவிடுகிறேன்

நன்றி,
வணக்கத்துடன்
SP.VR. சுப்பையா

வாழ்க வளமுடன்!

ஒதுக்கீடு இல்லாமல் ஒரு வகுப்பறை!